‘ஆட்டோ டிரைவர் டூ மேயர்’.. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி.. மனைவி உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆட்டோ டிரைவர் ஒருவர் கும்பகோணம் மேயராக உள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆட்டோ டிரைவர் டூ மேயர்’.. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி.. மனைவி உருக்கம்..!

கும்பகோணம் மாகராட்சியில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 42 வார்டுகளை கைப்பற்றின. இதில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 3 சீட்டு ஒதுக்கப்பட்ட நிலையில், 2 பேர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சி சார்பாக 11-வது வார்டில் போட்டியிட்ட அய்யப்பன், 17-வது வார்டில் போடியிட்ட சரவணன் ஆகியோர் வெற்றிபெற்றனர்.

அதனால் திமுகவுக்கே மேயர் பதவி என அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பல மேயர் சீட்டைப் பிடிக்க போட்டியிட்டு வந்தனர். ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் கும்பகோணம் மேயர் பதவியை கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் வெற்றிபெற்ற சரவணன், அய்யப்பன் இருவரின் பயோடேட்டாவையும் காங்கிரஸ் கட்சித் தலைமை கேட்டு பெற்றிருந்தது.

இந்த நிலையில், சரவணன் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 20 வருடங்களாக ஆட்டோ டிரைவராக இருந்து வரும் ஒருவரை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை பலரும் வரவேற்கின்றனர். இதுகுறித்து பேசிய சரவணன் மனைவி தேவி, ‘எங்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். நாங்க வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். என் கணவர் முதலில் வாடகை ஆட்டோ ஓட்டி வந்தார். 7 வருடங்களுக்கு முன்பு தான் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தது எங்க குடும்பம். என் கணவரின் தாத்தா குமாரசாமி கும்பகோணம் நகராட்சியில் கவுன்சிலராக இருந்தவர். முதன் முறையாக இந்த தேர்தலில்தான் என் கணவர் போட்டியிட்டதுடன், வெற்றியும் பெற்றார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மேயர் சீட் ஒதுக்கப்பட்ட நிலையில், என் கணவர் சரவணனுக்கு மேயர் சீட் வழங்கியுள்ளனர்.

எளிய குடும்பத்தைச் சேர்ந்த என் கணவருக்கு ஆட்டோ ஓட்டுவதுதான் முக்கிய தொழில். அதில் வரும் வருமானத்தில்தான் குடும்பத்தை நடத்தி வருகிறோம். அப்படிப்பட்ட எங்களுக்கு மேயர் பதவிக்கான சீட் வழங்கியதற்கு காங்கிரஸ் கட்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல, திமுக-வுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம். மறைமுகத் தேர்தலுக்குப் பிறகு ஆட்டோ டிரைவரான என் கணவர் சரவணன் மேயராக பொறுப்பேற்க இருப்பதை நினைக்கும் போதே பெரும் நெகிழ்ச்சி ஏற்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.

AUTO DRIVER, MAYOR, KUMBAKONAM

மற்ற செய்திகள்