'தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக'... 'நேரில் ஆஜராகுமாறு ரஜினிக்கு சம்மன்!'... 'விசாரணை ஆணையம் உத்தரவு'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

'தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக'... 'நேரில் ஆஜராகுமாறு ரஜினிக்கு சம்மன்!'... 'விசாரணை ஆணையம் உத்தரவு'...

2018 ஆம் ஆண்டு மே 22ம் தேதி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது. அப்போது, வன்முறையை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பல பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். அன்று, அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில், 'தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறையின்போது அங்குள்ள வாகனங்களை தீ வைத்து கொளுத்தியதும், போலீசாரை தாக்கியதும் சமூக விரோதிகள் தான். போராடிய மக்கள் அல்ல; அவர்கள் யாரென்று எனக்கு தெரியும்' என்று கூறியிருந்தார்.

அதோடு, 'ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாட்களில் எப்படி சமூக விரோதிகள் உட்புகுந்து போராட்டத்தை திசைதிருப்ப முயன்றார்களோ அதேபோன்றுதான் இங்கேயும் சமூக விரோதிகள் உட்புகுந்தனர்' என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 25ம் தேதி, தூத்துக்குடியில் அமைந்துள்ள விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஆஜராகி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் அவருக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்குமாறு அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.