கந்துவட்டியை தட்டிக்கேட்ட மாணவர்.. மளிகைக் கடையிலேயே வெட்டிக்கொன்ற கும்பல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கும்பகோணத்தில் கந்து வட்டியை தட்டிக் கேட்ட மாணவர், வெட்டிக் கொலை செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கந்துவட்டியை தட்டிக்கேட்ட மாணவர்.. மளிகைக் கடையிலேயே வெட்டிக்கொன்ற கும்பல்!

கும்பகோணம் பானாத்துறை பத்துக்கட்டு தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்ரமணியன். 5 ஆண்டுகளுக்கு முன்பு அதேப் பகுதியை சேர்ந்த செந்தில் மற்றும் அவரது சகோதரர் பாலகுரு ஆகியோரிடம் 3 லட்சம் ரூபாய் கடனாக வாங்கி உள்ளார். வாங்கிய கடனுக்கு 5 ஆண்டுகளில் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் வட்டி செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

3 லட்சம் ரூபாய் அசல் தொகையை கேட்டு வந்துள்ளனர். பணத்தைக் கேட்டு சிவசுப்ரமணியன் வீட்டிற்கு சென்ற கந்துவட்டி கும்பல், அவரது மகள்களிடம் தரம் தாழ்ந்து பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த சிவசுப்பிரமணியன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பிய சிவசுப்பிரமணியனை கந்துவட்டி கும்பல் மீண்டும் பணம் கேட்டு மிரட்டி உள்ளது.

அப்போது அருகில் இருந்த சுப்பிரமணியத்தின் மகனும், பாலிடெக்னிக் மாணவரான அருண் தந்தையை மிரட்டிய கந்துவட்டி கும்பலை தட்டிக்கேட்டுள்ளார். 'வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள் என்றும் பார்க்காமல் இப்படி கெட்டவார்த்தையைப் பயன்படுத்தியும், பெண்களையும் தப்பாக பேசுகிறீர்களே எனவும் உங்களுக்கு மனிதத்தன்மையே கிடையாதா' என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கும்பல் புதனன்று  அவர்களது மளிகை கடையில் அமர்ந்திருந்த அருணை கத்தி மற்றும் அருவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவர் அருண் உயிரிழந்தார். கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதைபதைக்கும் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. இக்கொலை  சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MURDER, KUMBAKONAM