'அதே கார்... அதே வழக்கு... அதே நீதிபதி'!.. விஜய்யை தொடர்ந்து தனுஷ்... உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!.. பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

'அதே கார்... அதே வழக்கு... அதே நீதிபதி'!.. விஜய்யை தொடர்ந்து தனுஷ்... உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!.. பின்னணி என்ன?

கடந்த 2015ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து நடிகர் தனுஷ் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு 60.66 லட்சம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிகவரித்துறை உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து, நுழைவு வரி வசூலிக்க தடை கோரி தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

dhanush rolls royce ghost entry tax madras high court

இதை விசாரித்த உயர்நீதிமன்றம், 50 சதவிகித வரியை செலுத்தும்பட்சத்தில் காரை பதிவு செய்யுமாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு 2015ம் ஆண்டு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையே, ரூ.30.33 லட்சம் வரியை செலுத்தியதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விதிகளைப் பின்பற்றி பதிவு செய்ய 2016ம் ஆண்டு ஏப்ரலில் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாததால் விசாரணை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

dhanush rolls royce ghost entry tax madras high court

அந்த வகையில், நுழைவு வரியிலிருந்து விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் தாக்கல் செய்த வழக்கில் இன்று (5.8.2021) உத்தரவு பிறபிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், "நுழைவு வரியில் இருந்து விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்த பின் தற்போது அதனை வாபஸ் பெற எப்படி அனுமதிக்க முடியும்?" என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

dhanush rolls royce ghost entry tax madras high court

மேலும் அவர் கூறியதாவது, "நீங்கள் எவ்வளவு கார் வேண்டுமானாலும் வாங்குங்கள். ஆனால், செலுத்தும் தொகையை முழுமையாக செலுத்துங்கள். பால்காரர் உள்ளிட்ட ஏழைகள் கூட பெட்ரோலுக்கு வரி செலுத்தும்போது, அதனை செலுத்த முடியவில்லை என அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்களா?" என்று கண்டனம் தெரிவித்தார். இறுதியாக, சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த நடிகர் தனுஷுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், திங்கட்கிழமைக்குள் நுழைவு வரியை செலுத்த தயார் என தனுஷ் தரப்பில் இருந்து வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இதே போல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கேட்ட நடிகர் விஜய்யை விமர்சித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தார். இது தொடர்பான விஜய்யின் மேல்முறையீட்டை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்