'சரி கடைசியா ஒருக்கா முகத்தை பாப்போம்'... 'இறந்தவரின் முகத்திரையை விலகிய உறவினர்கள்'... சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி திருப்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நிஜ வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் சினிமாவையே சில நேரங்களில் மிஞ்சி விடும். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தமிழகத்தில் நடந்துள்ளது.

'சரி கடைசியா ஒருக்கா முகத்தை பாப்போம்'... 'இறந்தவரின் முகத்திரையை விலகிய உறவினர்கள்'... சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி திருப்பம்!

கள்ளக்குறிச்சியில் தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் என்ற நபருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமானதையடுத்து அவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கொளஞ்சியப்பன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக, அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கொளஞ்சியப்பன் உடலைத் தொட்டியத்தில் உள்ள அவரது வீட்டிற்கு மருத்துவமனை ஊழியர்கள் அனுப்பி வைத்தனர்.

மயான கொட்டகையில் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் இறுதியாக அவரது முகத்தைப் பார்ப்பதற்காக அவரது முகத்தில் மூடப்பட்டிருந்த துணி விலக்கப்பட்டது. அதைப் பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். காரணம் இறந்ததாகக் கொண்டு வரப்பட்ட கொளஞ்சியப்பன் உடலுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடல் அங்கு இருந்தது. பின்னர் இது குறித்து உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்சில் கொளஞ்சியப்பன் வீட்டுக்குச் சென்று, அங்கிருந்த உடலை மீட்டு மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், மயானத்திற்குக் கொண்டு வரப்பட்டது திருக்கோவிலூர் சந்தைப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த பாலர் என்பது தெரியவந்தது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கொளஞ்சியப்பன் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொளஞ்சியப்பனை அங்கிருந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி, சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அன்று மதியம் 3 மணியளவில் சிகிச்சைக்காக கொரோனா வார்டுக்கு அழைத்து வரப்பட்ட பாலரை, கொளஞ்சியப்பன் சிகிச்சை பெற்ற படுக்கையில் கிடத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே காலையிலிருந்த ஊழியர்கள் பணி முடிந்து சென்று, இரவு நேர பணிக்குரிய ஊழியர்கள் வந்தனர். மேலும் கொளஞ்சியப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாலருக்குத் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் காலையில் சிகிச்சைக்கு வந்த கொளஞ்சியப்பன்தான் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் என நினைத்து அவரது வீட்டுக்கு மருத்துவமனை ஊழியர்கள் பாலரின் உடலை பாலித்தீன் பையால் மூடி ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி விட்டனர். பின்னர் மயானத்தில் வைத்து அவரின் முகத்தைப் பார்த்த போது தான் அது கொளஞ்சியப்பன் இல்லை என்பது தெரியவந்தது. கொரோனா தொற்று இல்லாத பாலர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததும், மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் அவரது உடலை கொளஞ்சியப்பன் வீட்டுக்கு அனுப்பி வைத்ததும் தெரிந்தது.

சிகிச்சையில் இருப்பவரின் வீட்டுக்கு, இறந்தவரின் உடலை அனுப்பி வைத்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

மற்ற செய்திகள்