'டாஸ்மாக் கடைகளில் வரப்போகும் அதிரடி வசதி'... 'அவ்வளவு தான் இனிமேல் சின்ராசை கையில பிடிக்க முடியாது'... வெளியான அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டாஸ்மாக் எலைட் கடைகளில் இருக்கும் வசதி தற்போது அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ளார்.

'டாஸ்மாக் கடைகளில் வரப்போகும் அதிரடி வசதி'... 'அவ்வளவு தான் இனிமேல் சின்ராசை கையில பிடிக்க முடியாது'... வெளியான அறிவிப்பு!

இது தொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ''தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) சார்பில் தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 330 மதுபான கடைகள் உள்ளன. இந்த அனைத்து மதுபான கடைகளிலும் மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வங்கிகளிடம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இந்த ஒப்பந்தப்புள்ளியில் 7 வங்கிகள் கலந்து கொண்டன. கலந்து கொண்ட மற்ற 7 வங்கிகளை விட ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, குறைவான ஒப்பந்தப்புள்ளி தொகை குறிப்பிட்டு மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவுவதற்குத் தேர்வாகி உள்ளது.

இதையடுத்து டாஸ்மாக் இயக்குநர் குழுமம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியுடன் இதுதொடர்பான ஒப்பந்தம் செய்துகொள்ள டாஸ்மாக் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மின்னணு விற்பனை எந்திரங்கள் வாயிலாக டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதற்குரிய தொகையை டெபிட் கார்டுகள், யு.பி.ஐ. (ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் இடைமுகம்), பீம் யு.பி.ஐ., யு.பி.ஐ. கியூ ஆர் கோட், கிரெடிட் கார்டு, இன்டர்நேஷனல் கார்டு ஆகியவற்றின் மூலம் செலுத்த முடியும்.

மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவும் பணியை இரண்டு மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் இந்த மின்னணு விற்பனை கருவியைக் கையாள்வதற்கு முறையான பயிற்சியும் அளிக்கப்படும். முன்னதாக சென்னை ஐகோர்ட்டு கடந்த மே மாதம் அளித்த தீர்ப்பில் டாஸ்மாக் மதுபான கடைகளில் மின்னணு விற்பனை எந்திரங்கள் வழியாக விற்பனைத் தொகையைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என ஆணை பிறப்பித்திருந்தது.

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க மின்னணு விற்பனை எந்திரங்கள் வாயிலாக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபான விற்பனைத் தொகையை மின் மயமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இந்த அறிவிப்பு மது பிரியர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்