‘யாராவது மேல ஏறுனீங்க கீழ குதிச்சிருவேன்’.. தென்னைமர உச்சியில் இளைஞர் ‘தற்கொலை’ மிரட்டல்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தென்னை மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் இளைஞரை மீட்க இரண்டு நாட்களாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

‘யாராவது மேல ஏறுனீங்க கீழ குதிச்சிருவேன்’.. தென்னைமர உச்சியில் இளைஞர் ‘தற்கொலை’ மிரட்டல்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!

கடலூர் திருப்பாதிரி புலியூர் மார்க்கெட் காலனியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் பிரேம் (19). இவர் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் சூரப்பன் நாயக்கன் சாவடிக்கு அருகில் உள்ள தோப்புக்கு சென்று தென்னை மரம் ஒன்றின் மீது வேகமாக ஏறியுள்ளார். அப்போது தோட்டத்தில் இருந்தவர்கள் பிரேமை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். ஆனால் கீழே இறங்க மறுத்துள்ளார்.

உடனே அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து தீயணைப்பு வீரர்களுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு தென்னை மரத்தின் உச்சியில் இருந்த பிரேமை கீழே இறங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், கீழே இறங்க மாட்டேன் என்றும், மரத்தில் ஏறி யாராவது மீட்க முயன்றால் கீழே குதித்து விடுவேன் என்றும் பிரேம் மிரட்டல் விடுத்துள்ளார்.

இரவு 10 மணிவரை பிரேமிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் திட்டவட்டமாக இறங்க மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளின் மின்விளக்குகளை அணைக்கும்படி போலீசார் கூறினர். மின்விளக்கை அணைத்த பிறகாவது பயந்து கீழே இறங்கிவிடுவார் என போலீசார் எண்ணினர். ஆனாலும் அவர் கீழே இறங்கவில்லை.

இதனை அடுத்து இன்று அதிகாலை 6 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. பின்னர் அவருக்கு காயம் ஏதும் ஏற்படாமல் இருக்க தென்னை மரத்தை சுற்று வலையை கட்டி, ஏணியை கொண்டுவந்து பிரேமை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை காண அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

SUICIDEATTEMPT, CUDDALORE, YOUTH, COCONUTTREE