'பாத்தா சும்மா இருக்க வேண்டியது தானே'... 'கத்தி கூப்பாடு போட்டா'... 'காதல் மனைவி கொடுத்த வாக்குமூலம்'... ஒரு நொடி போலீசாரே ஆடி தான் போனார்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

14 வருடக் காதல் கணவனை மனைவியே கொடூரமாகக் கொலை செய்து விட்டு, அவர் கொடுத்துள்ள வாக்குமூலம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'பாத்தா சும்மா இருக்க வேண்டியது தானே'... 'கத்தி கூப்பாடு போட்டா'... 'காதல் மனைவி கொடுத்த வாக்குமூலம்'... ஒரு நொடி போலீசாரே ஆடி தான் போனார்கள்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கிராமம் மேற்கிருப்பு. இங்கு முந்திரி தோப்புகள் அதிகம். இந்த நிலையில் அங்குள்ள முந்திரி தோப்பு ஒன்றில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிரமாக விசாரித்தும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

9 மாதங்களாக நடைபெற்ற விசாரணையில், தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காணாமல் போனவர்களின் விவரங்களைச் சேகரித்து அதன் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலையத்தில், நிலையத்தில் மேற்கு ராமாபுரத்தை சேர்ந்த சுதா என்பவர் தனது கணவர் ஸ்ரீதரனைக் காணவில்லை எனப் புகார் கொடுத்திருந்தார்.

இதனால் அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அவர் நடுக்கத்துடன், முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். இதில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்த காவல்துறையினர், அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவர்கள் பாணியில் விசாரித்தார்கள். அப்போது அவர் கூறியதைக் கேட்டு காவல்துறையினர் கூட ஒரு நிமிடம் ஆடிப் போனார்கள். முந்திரித்தோப்பில் எரிந்த நிலையில் கிடந்தது தனது கணவர் ஸ்ரீதரன் என்றும், தனது ஆண் நண்பருடன் சேர்ந்து தனது கணவனைக் கொன்றதாகக் கூறினார்.

இதையடுத்து சுதா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, ''எனது கணவர் ஸ்ரீதரனைக் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு மோகன், பரணி, என்ற 2 மகன்கள் உள்ளனர். ஸ்ரீதரன், பெரம்பலூரில் ஒரு தனியார் கல்லூரியில் உள்ள பேருந்துகளுக்குப் பொறுப்பாளராக இருந்து வந்தார். இதற்காக அவர் கல்லூரியிலேயே தங்கியிருந்து விட்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிற்கு வந்து செல்வார். எங்களுடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகத் தான் சென்று கொண்டிருந்தது. அது சிவராஜ் என்பவர் வருவதற்கு முன்பு வரை தான்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கணவர் வீட்டிற்கு வரும் போது சிவராஜ் என்பவரை உதவிக்காக ஸ்ரீதரன் அவ்வப்போது அழைத்து வருவார். அப்போது சிவராஜிக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது ஈர்ப்பாக மாறி, நாளடைவில் எங்களுக்குள் தகாத உறவாக மாறியது. ஸ்ரீதரன் வேலைக்காகப் பெரம்பலூர் செல்லும் நேரத்தில், சில நாட்கள் சிவராஜ் வீட்டிற்கு வந்து என்னுடன் தனிமையில் இருப்பார். இது ஒரு கட்டத்தில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் தெரிந்து விட்டது. அவர்களும் எனது கணவரிடம் நடந்த சம்பவங்கள் குறித்துக் கூறினார்கள்.

ஆனால் என் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்த எனது கணவர், எதையும் நம்பவில்லை. இந்த சூழ்நிலையில் கடந்த 11.7.2019 அன்று அதிகாலை 1.30 மணி அளவில் ஸ்ரீதரன், பெரம்பலூரிலிருந்து திடீரென வீட்டுக்கு வந்து விட்டார். அந்த நேரம் நானும் சிவராஜியும் வீட்டில் தனிமையில் இருந்ததை பார்த்து ஸ்ரீதரன் அதிர்ச்சியில் உறைந்து போனார். ''உன்ன பத்தி தப்ப சொல்லும் போது கூட உன்ன நம்பினேனே '' என கூறி கதறி அழுதார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

உடனே கத்தி, சத்தம் போட்டு அவர் சண்டையில் ஈடுபட்டார். எனக்கு ஆத்திரம் முற்றியது. அப்போது அருகில் கிடந்த கட்டையை எடுத்து, சிவராஜியுடன் சேர்ந்து ஸ்ரீதரனை அடித்துக் கொன்றேன். பின்பு ஒரு நாள் முழுவதும் அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்து, 11.7.2019 அன்று இரவு எனது தங்கையின் காரில் ஸ்ரீதரன் உடலைத் தூக்கிச் சென்று, மேற்கு இருப்பு கிராமத்தில் உள்ள முந்திரித்தோப்பில் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தோம். பின்னர் எங்களுக்கு ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்கு வந்து விட்டோம்.

பின்னர் யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காகக் கடந்த 22.7.2019 அன்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்துக்குச் சென்று எனது கணவரைக் காணவில்லை, கண்டுபிடித்துத் தாருங்கள் எனப் புகார் கொடுத்தேன். அவர்களும் பல இடங்களில் தேடிப் பார்த்து விசாரித்து வருவதாகக் கூறினார்கள்.

9 மாதங்கள் ஆகி விட்ட நிலையில், இனிமேல் கொலை செய்ததை யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைத்தோம். ஆனால் இந்த அளவிற்கு போலீசார் விசாரணை செய்து எங்களைப் பிடிப்பார்கள் எனக் கனவிலும் நினைக்கவில்லை'' எனச் சுதா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

முறை தவறிய உறவால் ஒரு உயிர்ப் பலியானதோடு, இரண்டு குழந்தைகளும் தற்போது அனாதை ஆகியுள்ளது. 14 வருடக் காதல் மனைவியே இந்த கொடூரச் செயலை செய்துள்ளது, அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.