‘ஜன்னலோரம் அமர்ந்து ரயிலில் பயணம்’.. சட்டென விழுந்த ஜன்னல் கதவு.. குழந்தையுடன் சென்ற சென்னை பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிதம்பரம் அருகே ரயிலில் உள்ள ஜன்னல் கதவு விழுந்ததில் குழந்தையுடன் பயணித்த பெண் பயணியின் கைவிரல் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘ஜன்னலோரம் அமர்ந்து ரயிலில் பயணம்’.. சட்டென விழுந்த ஜன்னல் கதவு.. குழந்தையுடன் சென்ற சென்னை பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி சரண்யா. இவர் தனது 5 வயது மகளுடன் மயிலாடுதுறையில் உள்ள தாய் வீட்டுக்கு கடந்த திங்கள் கிழமை சோழன் விரைவு ரயிலில் சென்றுள்ளார். ரயில் கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் அருகே வந்தபோது ரயிலில் உள்ள இரும்பிலான ஜன்னல் கதவு திடீரென விழுந்துள்ளது.

அப்போது ஜன்னலில் கை வைத்திருந்த சரண்யாவின் கைவிரல் துண்டாகியுள்ளது. இதனால் வலியில் அவர் அலறித்துடித்துள்ளார். அதே பெட்டியில் இருந்த சக பயணிகள் உடனே தாங்கள் வைத்திருந்த துணியால் தற்காலிகமாக துண்டாகிய விரலை கட்டியுள்ளனர். இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பயணச்சீட்டு பரிசோதகரிடம் (TTR) தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் அவரிடம் முதலுதவி பெட்டியை கேட்டுள்ளனர். ஆனால் முதலுதவி பெட்டி இல்லை என டிக்கெட் பரிசோதகர் சொன்னதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மயிலாடுதுறை ரயில் நிலையம் வந்ததும், அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். மேலும் ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளிலும் முதலுதவி பெட்டி வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ரயில் ஜன்னல் கதவு விழுந்து பெண் பயணியின் கைவிரல் துண்டான சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

TRAIN, ACCIDENT, CHENNAI, WOMAN