ஆண் நண்பரின் மனைவியை ‘பழிவாங்க’ பெண் செஞ்ச காரியம்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க பெண் ஒருவர் பைக்கை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் நண்பரின் மனைவியை ‘பழிவாங்க’ பெண் செஞ்ச காரியம்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!

சென்னை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், நள்ளிரவு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 பைக்குகள் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் உடனே வெளியே ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் தீயை அணைக்க முடியாததால் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை போரடி அணைத்தனர். இதில் 6 பைக்குகள் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் இந்த தீ விபத்தால் வீட்டுக்கு வெளியே இருந்த ஏசி இயந்திரம் ஒன்றும் எரிந்து சேதமடைந்தது. இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பெண் ஒருவர் பைக்குகளுக்கு தீ வைத்ததைப் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அப்பெண், அங்கு வசித்து வரும் பழனிபாபுகுமார் என்பவரின் கள்ளக்காதலி என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பழனிபாபுகுமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்தபோது அங்கு பணிபுரிந்த அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த கள்ளத்தொடர்பு காரணமாக திவ்யாவிற்கும், பழனிபாபுகுமாரின் மனைவி அமுதாவிற்கும் தகராறு ஏற்பட்டு இருப்பது

விசாரணையில் வெளிவந்துள்ளது. அதனால் பழனிபாபுகுமாரின் மனைவி அமுதாவை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் நேற்றுமுன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு வந்த திவ்யா, அமுதாவின் பைக்கிற்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதன்காரணமாக அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 பைக்குகளிலும் தீ பரவி எரிந்து நாசமானதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் திவ்யா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்குவதாக நினைத்து 6 பைக்குகளை பெண் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்