'சார், உங்களுக்கு பெஸ்ட்டா லோன் எடுத்து தரோம்'... 'ஆசை வார்த்தைகளை அள்ளி விட்ட இளம்பெண்'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

லோன் வாங்கி தருவதாகக் கூறி போலி கால்சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

'சார், உங்களுக்கு பெஸ்ட்டா லோன் எடுத்து தரோம்'... 'ஆசை வார்த்தைகளை அள்ளி விட்ட இளம்பெண்'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!

சென்னை, வேளச்சேரி, செல்லியம்மன் நகரில் வசித்து வருபவர் புருஷோத்தமன். இவரது எண்ணிற்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய இளம்பெண் வங்கியிலிருந்து லோன் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார். இதனை உண்மையென நம்பிய புருஷோத்தமன் தனது ஆவணங்களைக் கொடுத்துள்ளார். மேலும் கடந்த 4ஆம் தேதியன்று புருஷோத்தமனிடம் செல்போனில் தொடர்புகொண்டு GST மற்றும் CIBIL Score பார்க்க வேண்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் ரூபாய் 10,000 வரை வாங்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் இன்னும் அதிகமாக அவர்கள் பணம் கேட்ட நிலையில் புருஷோத்தமனுக்குச் சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து உஷாரான அவர் அடையார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட அடையார் சைபர் கிரைம் போலீசார், அழைப்பு வந்த செல்போன் IMEI எண்ணை வைத்து அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர்.

அந்த எண்ணில்  திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு, சி.சி.எச் ரோட்டில் HP Global Services Banking & Non Banking என்ற பெயரில் இயங்கிவந்த போலி கால்சென்டரை கண்டறிந்து, விசாரணை செய்தபோது புகார்தாரரிடம் பணம் பெற்று ஏமாற்றி வந்தது தெரியவந்தது. அதன்பேரில் கால்சென்டர் நடத்திவந்த நங்கநல்லூரை சேர்ந்த சண்முக பிரியா(24) மற்றும் செவ்வாப்பேட்டையை சேர்ந்த பிரேம்நாத்(30) ஆகிய 2 பேரைக் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள், 4 செல்போன்கள் மற்றும் 4,800 ரூபாய் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், சண்முக பிரியா மற்றும் பிரேம்நாத் இரண்டுபேரும் ஏற்கனவே ஒரே கால் சென்டரில் வேலை செய்து வந்ததும், அதன் அடிப்படையில் Just dial போன்ற பல்வேறு இணையதளங்கள் மூலம் லோன் கேட்டு விண்ணப்பித்தவர்களின் அலைப்பேசி எண்களைச் சேகரித்து, ஆசை வார்த்தைகள் கூறி, பணம் பெற்று ஏமாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்