இனி அவங்களும் நாமும் ஒன்றுதான்... கலக்கும் தேர்தல் ஆணையம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் முதல் முறையாக மனநலம் சரியில்லாதவர்களும் வாக்களிக்கும் வகையில், வாக்குப் பதிவு மையம் அமைக்கப்பட உள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இனி அவங்களும் நாமும் ஒன்றுதான்... கலக்கும் தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை மற்றும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில், முதல்முறையாக வாக்களிக்கும் முறையை கொண்டு வந்துள்ளனர் தேர்தல் நடத்தும் அதிகாரிகள். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் 900 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தவர்கள், வீடுகளுக்கு செல்கின்றனர். உறவினர்களால் கைவிடப்பட்டவர்களுக்கு மருத்துவமனையிலேயே தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இதுபோல் உறவினர்களால் கைவிடப்பட்ட குணமடைந்தவர்கள் 114 ஆண்கள், 78 பெண்கள் என மொத்தம் 192 பேர் மருத்துவமனையில் உள்ளனர். இதில் வாக்களிக்க தகுதி உடைய 192 பேரை மருத்துவர்கள் தேர்வு செய்துள்ளனர். இந்த 192 பேரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, தற்போது நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை நிலைநாட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வாக்களிக்க உள்ளவர்களுக்கான அடையாள அட்டை, வாக்கு சீட்டு என அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள் செய்து உள்ளனர்.

இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் தேர்தல் பார்வையாளர்கள், அரசு மனநல மருத்துவமனை இயக்குநர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், வாக்கு பதிவு இயந்திரம் வைத்து விழிப்புணர்வு செய்தனர்.

வாக்கு அளிக்கும் அவசியம் குறித்து கிராமிய கலை நிகழ்ச்சி, அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நடைபெற்றது. தேர்தல் நடைபெறும் அன்று கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் வாக்கு செலுத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்ட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

LOKSABHAELECTIONS2019, CHENNAI, VOTED, MENTALHEALTH