‘அம்மா இல்லாத குழந்தை’!.. காய்ச்சலால் வெளிச்சத்துக்கு வந்த கொடுமை.. சென்னையை அதிரவைத்த ‘ஆன்லைன்’ புகார்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் 6 வயது மகளை பெற்ற தந்தையே 2 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘அம்மா இல்லாத குழந்தை’!.. காய்ச்சலால் வெளிச்சத்துக்கு வந்த கொடுமை.. சென்னையை அதிரவைத்த ‘ஆன்லைன்’ புகார்..!

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ஷியாமளா (61). இவர் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமிக்கு ஆன்லைனில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில்,‘எனக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளை சந்தோஷ் பிரேம்குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தேன். ஹைதராபாத்தில் குடியிருந்தனர். அவர்களுக்கு 11 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மார்ச் 3ம் தேதி மூத்த மகள் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட்டாள். அவளது உடலை சென்னைக்கு கொண்டு வந்து அடக்கம் செய்தோம். இதன்பின்னர் பேரன், பேத்தி மற்றும் மருமகன் ஆகியோர் சென்னையில் தங்கி வந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு என் பேத்திக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால் அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அங்கு அவளை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு மருந்து கொடுத்தனர். அப்போது பேத்தியை பரிசோதித்தபோது அவளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பேத்தியிடம் விசாரித்தபோது அப்பா சந்தோஷ் பிரேம்குமார் மீது குற்றம் சுமத்தினார். அதனால் என்னுடைய மருமகன் சந்தோஷ் பிரேம்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் தந்தை சந்தோஷ் பிரேம்குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த போலீசார்,‘சென்னை மாதவரத்தை சேர்ந்த சந்தோஷ் பிரேம்குமாருக்கும், பெரம்பூரை சேர்ந்த ஷியாமளாவின் மூத்த மகளுக்கும் திருமணம் நடந்துள்ளது. இருவரும் ஹைதராபாத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். மார்ச் 3ல் சந்தோஷ் பிரேம்குமாரின் மனைவி இறந்தார். அதனால் குழந்தைகளுடன் சந்தோஷ் பிரேம்குமார் சென்னை வந்துள்ளார். மாமியார் வீட்டின் முதல் மாடியில் தங்கியிந்துள்ளனர். சந்தோஷ் பிரேம்குமாரின் மகளான 6 வயது சிறுமி, 1ம் வகுப்பு படித்து வருகிறார்.

அம்மா இல்லை என்பதால் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். ஊரடங்கு என்பதால் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக மகளிடம் சந்தோஷ் பிரேம்குமார் தவறாக நடந்துள்ளார். தனக்கு நடக்கும் கொடுமை அறியாத சிறுமி அதை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். காய்ச்சலால் அவதிப்பட்ட பிறகு தான் சிறுமிக்கு நடந்த கொடுமை மருத்துவர்கள் மூலம் வெளியே தெரிந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என போலீசார் தெரிவித்துள்ளனர். 6 வயது மகளை பெற்ற தந்தையே 2 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News Credits: Vikatan

மற்ற செய்திகள்