சுட சுட இட்லி ரெடி.. 3 ரூபாக்கு 2.. கூடவே ஸ்பெஷல் டோர் டெலிவரி வேற இருக்கு.. பட்டையைக் கிளப்பும் 70 வயது பாட்டி

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை : டிஜிட்டல் யுகமான இன்றைய காலகட்டத்திலும், 1.50 ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார் ஒரு மூதாட்டி.

சுட சுட இட்லி ரெடி.. 3 ரூபாக்கு 2.. கூடவே ஸ்பெஷல் டோர் டெலிவரி வேற இருக்கு.. பட்டையைக் கிளப்பும் 70 வயது பாட்டி

சென்னை ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி என்னும் தெருவில், 72 வயதான நிகோலஸ் என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் விரோனிகா (வயது 70). கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, விரோனிகா அப்பகுதியில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.

பலரும் தான் இட்லி வியாபாரம் செய்து வருகிறார்கள் என நீங்கள் நினைக்கலாம். இன்றைய காலகட்டத்தில், உணவகங்களில் ஒரு இட்லி விலை என்பது ஏற்குறைய  10 ரூபாய் வரை ஆகிவிட்டது. ஆனால், விரோனிகா என்னும் பாட்டி, ஏழை மக்களின் பசியாற்ற வேண்டி, ஒரு இட்லியை 1.50 ரூபாய்க்கு விற்று வருகிறார்.

டோர் டெலிவரி

அப்பகுதியிலுள்ள ஏழை, எளிய மக்களின் நலனுக்காக வேண்டி, விரோனிகா இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அது மட்டுமில்லாமல், விரோனிகாவின் இட்லி கடையில், டோர் டெலிவரியும் உள்ளது. கடையில் வருபவர்களுக்கு பார்சல் கொடுக்க மறுக்கும் விரோனிகா, 'காலையில் வேலைக்கு போகிறவர்கள் இட்லிக்கான பாத்திரத்தை என்னிடம் தந்து விட்டு போவார்கள். அவர்களுக்கு மட்டும் பல ஆண்டுகளாக வீடு தேடிச் சென்று, இட்லி கொடுத்தும் வருகிறேன்' என குறிப்பிட்டார்.

chennai 70 yr old grandma selling per idly for 1.50 rupees

குடும்பம் ஓட்டுகிறோம்

மேலும் தனது வியாபாரத்தை பற்றி விரோனிகா கூறுகையில், 'ஒரு நாளைக்கு சுமார் 300 ரூபாய்க்கு இட்லி விற்பேன். இதன் மூலம், எனக்கு லாபம் எதுவுமே கிடைப்பதில்லை. கிடைக்கும் 300 ரூபாயும், மறுநாளுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை வாங்குவதற்கே சரியாக இருக்கிறது. லாபம் இல்லாமல் நான் தொழில் செய்ய காரணம், பேங்க் ஏடிஎம் ஒன்றில் என் கணவர் வாட்ச்மேனாக பணிபுரிகிறார். அதனை வைத்து நாங்கள் குடும்பம் ஓட்டுகிறோம்' என தெரிவித்துள்ளார்.

கண்டு கொள்வதில்லை

தொடர்ந்து, தனது மனைவியின் தொழில் பற்றி, கணவர் நிகோலஸ் பேசும் போது, 'முதலில் 50 காசு, ஒரு ரூபாய் என விற்ற இட்லியை தற்போது என் மனைவி, 1.50 ரூபாய்க்கு சாம்பார், சட்னியுடன் விற்று வருகிறார். இந்த இட்லிக் கடையை நம்பி, சுமார் 100 குடும்பங்கள் வரை இப்பகுதியில் உள்ளன. என் மனைவி இட்லி வியாபாரம் செய்வதை, நானோ அல்லது திருமணமாகிச் சென்ற எங்களின் மூன்று மகள்களோ கண்டு கொள்வதே இல்லை.

கடினமான சூழ்நிலை

அவரின் மன திருப்திக்காக செய்வதால், அப்படியே விட்டு விட்டோம். அதிகாலை 3 மணிக்கு எழுந்து பரபரப்பாக வியாபாரத்தில் விரோனிகா  ஈடுபட்டு வருவார். ஒரு கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்த நான், ஓய்வு காலத்திற்கு பிறகு, வங்கி ஏடிஎம் ஒன்றில், வாட்ச் மேனாக பணிபுரிந்து வருகிறேன். கொரோனா பெயரில், சம்பளத்தை நிறுத்தி விட்டனர்.

chennai 70 yr old grandma selling per idly for 1.50 rupees

ஆனால், வங்கி ஊழியர்கள் மற்றும் இடத்தின் உரிமையாளர்கள் ஆகியோர் இரக்கப்பட்டு கொடுக்கும் பணத்தைக் கொண்டு காலத்தை களித்து வருகிறோம். கிடைக்கும் பணத்தில் நாங்களும் சாப்பிட்டு, வாடகையும் கொடுத்து வருவது மிகவும் கடினமாக உள்ளது' என நிகோலஸ் தெரிவித்துள்ளார்.

பாட்டியின் குணம்

இந்த காலத்திலும், ஒன்றரை ரூபாய்க்கு இட்லி வியாபாரம் செய்யும் மூதாட்டி குறித்த செய்தியை தினகரன் வெளியிட்டுள்ளது. தனக்கு லாபம் எதுவும் கிடைக்காத நிலையிலும், மிகவும் கடினமான குடும்ப சூழ்நிலையிலும் கூட, தன்னுடைய மன நிம்மதிக்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும், ஒன்றரை ரூபாய்க்கு இட்லி வியாபாரம் செய்து வரும் பாட்டியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதே போல, அவரை அப்பகுதி மக்கள்  பாசமாக 'ஒன்னா ரூபாய் இட்லி பாட்டி' என்று தான் செல்லமாக அழைக்கிறார்கள்.

CHENNAI, IDLY, IDLY PAATI, இட்லி, டோர் டெலிவரி

மற்ற செய்திகள்