அண்ணனின் 10 வயது மகனுக்கு... சித்தப்பாவால் நேர்ந்த பயங்கரம்... நீதிமன்றம் கொடுத்த தண்டனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அண்ணன், தம்பி பிரச்சனையில், கோபத்தில் அண்ணனின் மகன் என்றும் பாராமல் 10 வயது சிறுவனை, சித்தப்பாவே கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணனின் 10 வயது மகனுக்கு... சித்தப்பாவால் நேர்ந்த பயங்கரம்... நீதிமன்றம் கொடுத்த தண்டனை!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே காட்டுஎடையாா் கிராமத்தைச் சோ்ந்தவர் ராஜேந்திரன் (40). இவருக்கும், விவசாயியான இவரது தம்பி பாண்டியனுக்கும் (36) இடையே பம்புசெட் மூலம் நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், அண்ணன் ராஜேந்திரனின் கடைசி மகன் சந்தோஷ் (10) கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அண்ணணின் மேல் இருந்த கோபத்தில், அண்ணன் மகன் என்றும் பாராமல் சந்தோஷை, சித்தப்பாவான பாண்டியன் அரிவாளால் வெட்டியதில்  சிறுவன் சந்தோஷ் உயிரிழந்தாா். கடந்த 2015-ம் ஆண்டு, பிப்ரவரி 10-ம் தேதி நடைப்பெற்ற இந்த சம்பவத்தில், ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து பாண்டியனைக் கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.

விழுப்புரம் மாவட்ட கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அப்போது குற்றம்சாட்டப்பட்ட பாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். கோபத்தில் அண்ணனின் மகனையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MURDER, VILLAGE, VILLUPURAM