'பயமா' இருக்கு சார்...! அவன் எதுக்கு இந்நேரத்துக்கு வரான்..? நள்ளிரவில் பதைபதைக்கும் சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நள்ளிரவில் படுக்கையறையை குறிவைத்து உலா வரும் மர்ம நபரால் கோவை மக்கள் பீதியடைந்துள்ளனர்.

'பயமா' இருக்கு சார்...! அவன் எதுக்கு இந்நேரத்துக்கு வரான்..? நள்ளிரவில் பதைபதைக்கும் சம்பவம்...!

நள்ளிரவு நேரம், ஊர் அடங்கிய பிறகுதான் அந்த நபர் தன் வேலையைத் தொடங்குகிறார். பைக்கில் மக்கள் குடியிருப்புக்கு வருகிறார். செருப்பையும் ஜெர்கினையும் பைக்கிலேயே கழற்றி வைத்துவிடுகிறார். அக்கம் பக்கம் சுற்றிப்பார்த்துவிட்டு, மெதுவாக சுவர் ஏறி குதிக்கிறார்.

இப்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அந்த நபர், தடாகம் சாலை இடையர்பாளையத்தில் உள்ள மருதம் நகர், பாரதி காலனி ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று வீடுகளின் பெட்ரூம் ஜன்னல்களை நோட்டம் விட்டுள்ளார். மேலும், பூம்புகார் நகர், குறிஞ்சி நகர், முல்லை நகர், கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் அந்த நபர் சுற்றி வருகிறார். ‘இதுகுறித்த சிசிடிவி வீடியோக்களைப் பார்க்கும்போதே மனது பதைபதைக்கிறது’ என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ``வீட்டின் பெட்ரூம் ஜன்னல்களை மட்டுமே குறிவைத்துப் பார்த்து சென்றுகொண்டிருக்கிறான். அவன் எந்தப் பொருளையும் திருடவில்லை. இதுதான் எங்களுக்குப் பயமாக இருக்கிறது. அவனின் நோக்கம் என்னவென்றே தெரியவில்லை.

ஏற்கெனவே, கடந்த காலங்களில் இதே பகுதியில், கணவன் மனைவி பிரைவசியை எட்டிப் பார்த்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவனும் அந்த நபரைப் போலவே மனநலம் பாதித்தவனாக இருப்பானோ எனத் தோன்றுகிறது. இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்" என்றனர்.

துடியலூர் போலீஸாரிடம் பேசியபோது, ``அந்தப் பகுதி மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அங்கு இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த மூன்று நாள்களாக அந்த நபர் எங்கும் உலா வரவில்லை.

அவன் ஓட்டி வரும் பைக்கின் நம்பரை வைத்து விசாரணை நடத்திவருகிறோம். விரைவில் அவனைப் பிடித்துவிடுவோம்" என்றனர்.

MIDNIGHT