'வித்து' சாப்பிடக் கூட 'வழியில்லை...' 'அடகு வைக்க' கொண்டு வந்த 'அண்டாவுடன்...' 'ஒற்றை ஆளாக' போராட்டம் நடத்திய 'நபர் கைது...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாகர்கோவில் அருகே ஊரடங்கு உத்தரவால் வருமானம் இல்லாததால் அடகு வைக்கக் கொண்டுவந்த அண்டாவுடன் போராட்டம் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

'வித்து' சாப்பிடக் கூட 'வழியில்லை...' 'அடகு வைக்க' கொண்டு வந்த 'அண்டாவுடன்...' 'ஒற்றை ஆளாக' போராட்டம் நடத்திய 'நபர் கைது...'

நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு இந்த ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பொதுமக்களும் 21 நாட்களை எப்படியோ கடத்தி விட்டனர். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராததால் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்படுவதாக பிரதமர் மோடி மீண்டும் அறிவித்துள்ளார். இதனால் கையில் பணமில்லாமல் பலரும் தவித்துப் போய் உள்ளனர்.

அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தினக் கூலிகள், வாரம்  மற்றும் மாத வருமானம் பெரும் ஊழியர்கள் போன்றவர்கள் செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளனர்.  யாரிடமாவது கடன் பெற்றாவது நிலைமையை சமாளிக்கலாம் என்றால் அதற்கும் வழிஇல்லாத வகையில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இதனால் வெறுத்துப் போன தொழிலாளி ஒருவர் அடகு வைக்க கொண்டு சென்ற அண்டாவுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில் அருகே வசித்து வரும் தவசிமுத்து என்பவர் ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாததால், அடகு வைக்க அண்டாவை எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் அடகுக் கடை முதற்கொண்டு அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் ஆத்திரமடைந்த அவர், அண்டாவுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். இதைக் கண்ட போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.