'லேசர் கதிர் பயன்பாட்டில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள்...' எந்த துறைகளில் வேலைக்கு ஆள் எடுப்பாங்க...? - என்ஐடி பேராசிரியர் கூறும் சிறப்பு தகவல்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொறியியல் துறை மாணவர்கள் தங்கள் படிப்புடன், லேசர் அலைக்கற்றை பயன்பாடு குறித்து தெரிந்துக் கொள்வது நல்லது,  ஏனெனில் அதில் வேலை வாய்ப்புகள் எக்கச்சக்கம் இருப்பதாக திருச்சி என்ஐடி பேராசிரியர் துரை செல்வம் தெரிவித்துள்ளார்.

'லேசர் கதிர் பயன்பாட்டில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள்...' எந்த துறைகளில் வேலைக்கு ஆள் எடுப்பாங்க...? - என்ஐடி பேராசிரியர் கூறும் சிறப்பு தகவல்கள்...!

அண்ணாமலை பல்கலைக்கழக உற்பத்தியியல் பொறியியல் துறையில் ‘லேம்ப்’ என்ற தலைப்பில் இணைய வழி சிறப்பு நிபுணர் உரை நடைபெற்றுள்ளது.

அதில், உற்பத்தியியல் பொறியியல் துறையின் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். அப்போது 'உலகத்தரம் வாய்ந்த நுண்பொருட்களில் லேசர் கதிர்களின் பங்கு’ என்ற தலைப்பில் திருச்சி என்ஐடி பேராசிரியர் துரை செல்வம் இணைய வழியில் உரையாற்றினார். “லேசர் அலைக்கற்றையை பயன்படுத்தி ஆப்பரேஷன் செய்வதை போல், லேசர் அலைக்கற்றைகளை பயன்படுத்தி உலோகங்கள், அலோகங்கள், உலோக கலவைகள் ஆகியவற்றை இணைக்கவும் செம்மை படுத்தலாம். 300 வாட்ஸ் முதல் 3000 வாட்ஸ் திறன் வரையுள்ள லேசர் அலைக்கற்றைகளை பயன்படுத்தி மிகவும் நுண்ணிய சாதனங்களையும் மிக நுட்பமான முறையில் தயாரிக்கலாம். ‘லேசர் அப்லேஷன்’ என்ற முறையில் 'நானோ கோட்டிங்' செய்யப்படுகிறது. ‘லேசர் சின்டரிங்’ என்ற முறையின் மூலம் மிகவும் கடினமான ராக்கெட் இன்ஜினின் உதிரி பாகங்கள் செய்யப்படுகின்றன.

மேலும் ‘லேசர் வெல்டிங்’ முறையில் இருவேறு உலோகங்களை எளிதாக இணைத்து அணு உலைகளின் உதிரி பாகங்கள் செய்ய பயன்படுகின்றன. ‘லேசர் சர்ஃபேசிங்’ என்ற முறையில் அதிக வெப்பத்தையும், உராய்வையும், தாங்கக் கூடிய உலோகக் கலவைகள் உருவாக்கப்படுகின்றன.

செல்போன்களில் பயன்படும் மைக்ரோசிப்கள் ‘லேசர் மெஷினிங்’ என்ற முறையில் செய்யப்படுகின்றன. ‘மைக்ரோ ஜாயினிங்’ எனும் அடிப்படையில் மின்னணு சாதனங்களின் சர்க்யூட் போர்டுகள் தயாரிக்கப்படுகிறது. ‘லேசர் மார்க்கிங்’ என்ற முறையில் கணினி கீ-போர்டுகளில் எழுத்துக்கள் பொறிக்கப்படுகின்றன.

இதுபோன்று பல விதங்களில் லேசர் அலைக்கற்றைகளின் பயன்பாடு உற்பத்திப் பொறியியல் துறையில் நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டே வருகிறது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உற்பத்தி பொறியியல் துறையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள ‘ரோபோட்டிக் வெட்டில் மெஷின்’ உள்ளது. உற்பத்திப் பொறியியல் மாணவர்கள் தங்கள் பட்டபடிப்புடன் லேசர் கதிர் பயன்பாடு அறிவையும் வளர்த்துக் கொண்டால் வேலை வாய்ப்புகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் எக்கச்சக்கமாக குவிந்து கிடக்கிறது” என்று திருச்சி என்.ஐ.டி பேராசிரியர் திரு.துரை செல்வம் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்