"யார பார்த்து சினிமாவுக்கு வரணும்ன்னு நினச்சேனோ".. சூப்பர் ஸ்டாருடன் சந்திப்பு.. நடிகர் சூரி உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகியுள்ளது.

"யார பார்த்து சினிமாவுக்கு வரணும்ன்னு நினச்சேனோ".. சூப்பர் ஸ்டாருடன் சந்திப்பு.. நடிகர் சூரி உருக்கம்..!

விடுதலை படத்தில் நடிகர்கள் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தங்கம் எழுதிய வேங்கச்சாமி திரைக்கதையை மூலக்கதையாகக் கொண்டும்,  ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக்  கொண்டும் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளது.

பீரியட் டிராமா திரைப்படமான இப்படத்தில் புதிதாக காவல்துறையில் டிரைவராக சேரும் குமரேசன்(சூரி) அங்கு காவல்துறையினரால் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வரும் மக்கள் படை தலைவர் பெருமாள் என்கிற வாத்தியார் (விஜய் சேதுபதி) பிடிபட எவ்வாறு காரணமாகிறார்? இதில் மக்கள் காவல்துறையினரை நம்புகின்றனரா அல்லது மக்கள் படை தலைவர் பக்கம் நிற்கின்றனரா? இதன் பிரச்சனை தொடங்கும் மையம் எது ? இதற்குள் நடக்கும் அரசியல் பின்னணி என்னென்ன? என்று பல கோணங்களில் உருவாகி இருக்கிறது விடுதலை திரைப்படம்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விடுதலை படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். வெற்றிமாறன், சூரி மற்றும் தாணு உள்ளிட்டோர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்திருக்கின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சூரி எழுதியுள்ள ட்விட்டர் பதிவில்,"இதுவரை கிடச்ச வாழ்த்துகளுக்கு சிகரமாக வந்தது தலைவர் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து. யார பார்த்து பிரமிச்சு சினிமாவுக்கு வரணும்ன்னு நினச்சேனோ அவர் எங்கள் படைப்பையும் உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்றேன். இறைவனுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். அதனுடன் இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

 

VIDUTHALAI, RAJINIKANTH, SOORI

மற்ற செய்திகள்