ஒரே தெருவில் '71' பேருக்கு 'கொரோனா'... அதிரடியாக 'மீண்டு'... 'நம்பிக்கை' தரும் 'சென்னைவாசிகள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையின் ஒரே தெருவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட 71 பேர், உயிரிழப்பு எதுவுமின்றி அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஒரே தெருவில் '71' பேருக்கு 'கொரோனா'... அதிரடியாக 'மீண்டு'... 'நம்பிக்கை' தரும் 'சென்னைவாசிகள்'!

ஏப்ரல் மாத இறுதியில் சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கிய நிலையில், நாள்தோறும் சுமார் 500 பேர் சென்னையில் மட்டும் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையின் ஐஸ் ஹவுஸ் பகுதியிலுள்ள வி.ஆர் பிள்ளை தெருவில், தினக்கூலிகளாக பலர் வசித்து வருவதால், அங்குள்ளவர்களுக்கு அதே பகுதியை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வந்துள்ளார்.

இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 27 - ம் தேதி அந்த தன்னார்வலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட, அங்குள்ள மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியது. அடுத்த பத்து நாட்களில் வி ஆர் பிள்ளை தெருவில் 71 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆனால், மே 8 - ம் தேதிக்கு பிறகு புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படாத நிலையில், தற்போது 71 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அது மட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் மூலம் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. தொடக்கத்தில் அந்த தெருவிலுள்ள மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் தான் வேகமாக பரவியது என்றும், அதன் பின்னர் உணர்ந்து கொண்ட மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஒத்துழைப்பு அளித்ததால் தான் கொடிய வைரசில் இருந்து மீண்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் தினக்கூலிகள் வசிக்கும் இந்த தெருவில், ஒரு மாத காலம் தெருவின் இரு பக்கமும் அடைக்கப்பட்டு கடும் நெருக்கடியிலேயே மக்கள் கழித்துள்ளனர். ஒரு மாத காலம் அச்சத்துடன் வாழ்ந்தாலும், நோயின் தாக்கத்தை உணர்ந்து கொண்டு அதனை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டதால் தான் மீண்டோம் என நம்பிக்கையுடன் பதிலளிக்கின்றனர் அந்த தெருவில் உள்ளவர்கள்.

மற்ற செய்திகள்