ஒருத்தரை ஒருத்தர் காப்பாற்றப்போய்... தாய், மகன், பேரனுக்கு... அடுத்தடுத்து நடந்த சோகம்... பதறிப்போன மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில், ஒருவரை ஒருவர் காப்பற்றப்போய் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருத்தரை ஒருத்தர் காப்பாற்றப்போய்... தாய், மகன், பேரனுக்கு... அடுத்தடுத்து நடந்த சோகம்... பதறிப்போன மக்கள்!

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள சத்திரப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர்  ஒப்பாயி (75). இவரது மூத்த மகன் ராமமூர்த்தி (50) விவசாயி. இவருக்கு சொந்தமாக, நவலூர்குட்டப்பட்டு பகுதியில் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தனர். வயலில் பாசனத்துக்காக வெட்டப்பட்ட கிணறும், அருகே மின் மோட்டார் இணைப்புக்காக அமைக்கப்பட்ட மின் கம்பமும் உள்ளது.

இந்நிலையில், நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில், வயலுக்கு உரம் தெளிப்பதற்காக, ராமமூர்த்தி, தனது மகன் குணசேகரன்(23) மற்றும் தாய் ஒப்பாயி உடன் சென்றுள்ளார். கரையில், ஒப்பாயியும், அவரது மகன் ராமமூர்த்தியும் நின்று கொண்டு உரம் கலந்து கொடுக்க, வயலில் இறங்கி குணசேகரன் உரத்தை தெளித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வயல்வெளிக்கு மேலே இருந்த மின்கம்பி அறுந்து விழுந்தது. வயலில் தண்ணீர் தேங்கி இருந்ததால் குணசேகரன் மீது மின்சாரம் பாய்ந்ததில், அவர் துடிதுடித்தார்.

இதனைக் கண்டு வரப்பில் நின்றிருந்த ராமமூர்த்தி மற்றும் ஒப்பாயி அதிர்ச்சி அடைந்தனர். மகனை காப்பாற்றுவதற்காக ராமமூர்த்தி வயலில் இறங்கி ஓடினார்.  இதில் மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. மகனும், பேரனும் வயலில் மின்சாரம் பாய்ந்து துடிப்பதை கண்ட ஒப்பாயியும் வயலில் இறங்கி ஓடினார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைப் பார்த்து பக்கத்து வயலில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர்.

வயலில் மின்கம்பி கிடந்ததால், யாரும் வயலுக்குள் செல்லாமல் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் அப்பகுதி மக்கள் வயலில் இறங்கி மின் கம்பியை அப்புறப்படுத்தினர். தகவல் அறிந்து வந்த போலீசார், அங்கு சென்று 3 பேர் உடல்களையும் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TAMILNADU, TRICHY, ELECTRICAL, WIRES, MOTHER, SON, GRANDSON