'ஏன்டா உன்ன நம்பி தானே அனுப்புனேன்'... 'பொறியியல் மாணவனின் கொடூர புத்தி'... காசியின் வழி வந்த இன்ஸ்டா பாய்ஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொள்ளாச்சி சம்பவம் மற்றும் நாகர்கோவில் காசி வழக்குகள் ஏற்படுத்திய வடுக்கள் தமிழகத்தை விட்டு இன்னும் விலகாத நிலையில் அதேபோன்ற சம்பவத்தில் பொறியியல் படித்த மாணவன் ஒருவன் ஈடுபட்டுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

'ஏன்டா உன்ன நம்பி தானே அனுப்புனேன்'... 'பொறியியல் மாணவனின் கொடூர புத்தி'... காசியின் வழி வந்த இன்ஸ்டா பாய்ஸ்!

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமாரின் செல்போன் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வருகிறது. அந்த குறுந்தகவலை அனுப்பிய இளம் பெண் சொன்ன தகவல் அவரை அதிர்ச்சி அடையச் செய்தது. அந்த பெண் அனுப்பிய புகாரில், ''இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு கும்பல் என்னிடம் நட்பாகப் பழகி, எனது புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து பணம் பறிப்பதாக'' தனது புகாரில் அந்த பெண் தெரிவித்திருந்தார்.

இன்ஸ்டாவில் நட்பாக முதலில் அழைப்பு விடுப்பார்கள். அதை ஏற்றுக்கொள்ளும் பெண்களிடம் முதலில் நட்பாகப் பழகுவார்கள். நன்றாகப் பேசிப் பழகும் அந்த கும்பல், தங்களை நல்லவர்கள் போல அந்த பெண்களிடம் காட்டிக் கொள்வார்கள். பின்னர் அவர்களின் புகைப்படங்களைப் பெற்றுக்கொள்ளும் அந்த கும்பல், மார்பிங் முறையில் தத்ரூபமாக ஆபாசப் படங்களாகச் சித்தரிப்பார்கள்.

பின்னர் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அந்த புகைப்படங்களை அனுப்பி அதிர்ச்சி கொடுப்பார்கள். அந்த புகைப்படங்களைப் பார்த்து ஆடிப் போகும் அந்த பெண்களிடமே அந்த கும்பல் பேரம் பேசும். இவ்வாறு அந்தக்கும்பல் லட்சக்கணக்கில் பல பெண்களிடம் பணத்தைப் பறித்துள்ளார்கள். இதையடுத்து ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரின் அறிவுறுத்தல் படி சமூக ஊடக குற்றவாளிகளின் சமூக வலைத்தளங்கள், வங்கிக் கணக்குகள், இணையதள வங்கி பரிவர்த்தனைகளைத் தனிப்படையினர் தீவிரமாகக் கண்காணித்தனர் .

அப்போது ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று வரும் மாணவரான கீழக்கரையைச் சேர்ந்த முகமது முகைதீன் தலைமையில் கும்பல் ஒன்று செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. முகமது முகைதீன் பெண்களை மிரட்டிப் பறிக்கும் தொகையில் நண்பர்களுக்குச் சிறிது கமிஷனை கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தைத் தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றியது தெரியவந்தது. 

இது தொடர்பாக முகமது முகைதீன், புதுச்சேரி முகமது இப்ராஹிம் நூர், சென்னை பாசித் அலி, திருநெல்வேலி ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசுல், நாகப்பட்டினம் முகமது ஜாசிம் உள்ளிட்ட ஆறு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் திருநெல்வேலி ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசுல் ஆகிய இருவரைக் கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

படிக்கின்ற வயதில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, தன்னை நல்லவன் என்று நம்பிய பெண்ணையே ஆபாசமாகச் சித்தரித்து, அந்த பெண்களிடமே பணம் பறித்துள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற செயல்களில் படிக்கின்ற வயதில் இருக்கும் மாணவர்கள் ஈடுபடும் போது அவர்களை அவர்களது பெற்றோர் எப்படி வளர்க்கிறார்கள், என்ன அறத்தைச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை என்பதே நிதர்சனம்.

மற்ற செய்திகள்