‘கொஞ்சம் சீக்கிரம் வந்திருந்தா காப்பாத்திருக்கலாமே’.. நடுரோட்டில் ‘மரங்களை’ போட்டு போராட்டம்.. பரபரப்பான நேஷனல் ஹைவே..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சாலை விபத்தில் சிக்கியவரை மீட்க 108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

‘கொஞ்சம் சீக்கிரம் வந்திருந்தா காப்பாத்திருக்கலாமே’.. நடுரோட்டில் ‘மரங்களை’ போட்டு போராட்டம்.. பரபரப்பான நேஷனல் ஹைவே..!

புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிப்காட் அருகே ரெங்கம்மாள் சத்திரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடந்த போது அந்த வழியாக வந்த மினி சரக்கு வாகனம் ஒன்று பால்ராஜ் மீது மோதி விபத்துக்குள்ளானது. உடனே மினி சரக்கு வாகனத்தின் டிரைவர் வண்டியை சாலையிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பால்ராஜை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் தகவல் தெரிவித்து 1 மணி நேரத்துக்கு மேலாகியும் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு வராததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலையில் மரங்களைப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸில் படுகாயமடைந்த பால்ராஜை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பால்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். சரியான நேரத்துக்கு ஆம்புலன்ஸ் வந்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மினி சரக்கு வாகனத்தின் டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மற்ற செய்திகள்