சும்மா சுத்தி சுத்தி அடிச்ச 'இளம்' புயல்.. மிரட்டித் தள்ளிய 'ஓப்பனிங்' காம்போ.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் 'RCB' ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், ராஜஸ்தான் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

சும்மா சுத்தி சுத்தி அடிச்ச 'இளம்' புயல்.. மிரட்டித் தள்ளிய 'ஓப்பனிங்' காம்போ.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் 'RCB' ரசிகர்கள்!!

இந்த போட்டியில், டாஸ் வென்ற பெங்களூர் அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி ஆடிய ராஜஸ்தான் அணியில், தொடக்க விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இருந்த போதும், மிடில் ஆர்டரில் ஷிவம் துபே மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகியோர், ஓரளவு சிறப்பாக ஆடியதால், ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணியில், தொடக்க வீரர்களான தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) மற்றும் கோலி (Kohli) ஆகியோர் எந்தவித நெருக்கடியும் இன்றி ஆடி ரன் குவித்தனர். இருவரும், பேட்டிங் துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில், இளம் வீரரான தேவ்தத் படிக்கல் சதமடித்து அசத்தினார்.

கடந்த சீசன் முதல் பெங்களூர் அணிக்காக ஆடி வரும் தேவ்தத் படிக்கல், பல போட்டிகளில் அந்த அணியின் தூணாக இருந்து செயல்பட்டுள்ளார். இந்த சீசனில் இதுவரை, இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள தேவ்தத் படிக்கல், பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.

ஆனால், இன்றைய போட்டியில், தனது முதல் ஐபிஎல் சதத்தையும் பதிவு செய்து, அசத்தியுள்ளார். மறுமுனையில், கோலி 72 ரன்களுடன் அவுட்டாகாமல் நின்ற நிலையில், விக்கெட்டுகள் எதையும் இழக்காத பெங்களூர் அணி, 17 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்து, பட்டையைக் கிளப்பியது. மேலும், ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில், விக்கெட்டுகளை இழக்காமல், எட்டப்பட்ட இரண்டாவது சேஷிங் ஸ்கோராகவும் இது பதிவானது.

இந்த சீசனில், இதுவரை நான்கு போட்டிகளில் ஆடியுள்ள பெங்களூர் அணி, நான்கிலும் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதுவரை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாத பெங்களூர் அணி, இந்த முறை பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அதிக பலத்துடன் காணப்படும் நிலையில், இந்த தடவை கோப்பையைக் கைப்பற்றி, சாதனை படைக்கும் என பெங்களூர் ரசிகர்கள், அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மற்ற செய்திகள்