அரையிறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வி.. அடுத்த கணமே வீராங்கனை 'வீட்டின்' முன் நடந்த 'அதிர்ச்சி' சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டோக்கியோ ஒலிம்பிக்கில் அரையிறுதிச்சுற்றுவரை முன்னேறி இந்திய மகளிர் ஹாக்கி அணி வரலாற்று சாதனை புரிந்துள்ள நிலையில், அவ்வணியின் வீராங்கனை வந்தனா கட்டாரியாவை சாதி பெயரைக் கூறி திட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அரையிறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வி.. அடுத்த கணமே வீராங்கனை 'வீட்டின்' முன் நடந்த 'அதிர்ச்சி' சம்பவம்..!

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் வந்தனா கட்டாரியா. ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்தவர் வந்தனா கட்டாரியா. ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய வீராங்கனைகளில் ஹாட்ரிக் கோல்கள் அடித்த முதல் பெண் வந்தனா என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியிடம் இந்திய மகளிர் அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியுடன் இந்திய மகளிர் அணி மோதவுள்ளது.

இந்நிலையில், அர்ஜென்டினா அணியுடன் இந்திய அணி தோல்வி அடைந்த செய்தி கேட்டதும், இரு நபர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தின் ரோஷனாபாத்தில் உள்ள வந்தனா வீட்டின் முன்பு வந்து நின்று நடனமாடி, கிண்டல் செய்து, பட்டாசுகளை வெடித்துள்ளனர்.

இந்தச் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த வந்தனாவின் குடும்பத்தினர் வந்து பார்த்தபோது, அவர்களின் சாதிப் பெயரைக் கூறி அவதூறு செய்துள்ளனர். மேலும், இந்திய அணி தோற்றதற்கு அதிகமான தலித் பிரிவினரைச் சேர்த்ததுதான் காரணம் எனக் கூறி அவதூறு சொற்களால் திட்டிச் சென்றனர். அப்போது வந்தனாவின் குடும்பத்தாருக்கும், அந்த இரு நபர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் அந்த இரு நபர்களும் அங்கிருந்து புறப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து வந்தனா கட்டாரியாவின் சகோதரர் காவல்துறையிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த நபர்களைத் தேடி வந்தனர். அப்போது போலீஸார் நடத்திய விசாரணையில் ஒருவர் அடையாளம் கண்டறியப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அவர் பெயர் விஜய் பால் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இவர்கள் இருவர் மீதும் ஐசிபி 504, எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்