"பாகிஸ்தான் 'டீம்'க்குள்ள என்ன நடக்குதுன்னு எல்லாருக்கும் தெரியணும்..." ரகசியம் உடைத்து வருத்தப்பட்ட 'அமீர்'... பரபரப்பு 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் சில தினங்களுக்கு முன் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருந்தார்.

"பாகிஸ்தான் 'டீம்'க்குள்ள என்ன நடக்குதுன்னு எல்லாருக்கும் தெரியணும்..." ரகசியம் உடைத்து வருத்தப்பட்ட 'அமீர்'... பரபரப்பு 'சம்பவம்'!!!

பாகிஸ்தான் அணி நிர்வாகம் மீது குற்றம் கூறிய அமீர், தான் ஓய்வு பெறுவது குறித்து விரிவான காரணம் என்ன என்பது பற்றி விரைவில் தெரிவிப்பேன் என்றும் கூறியிருந்தார். 28 வயதேயான அமீரின் ஓய்வு அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தனது ஓய்வுக்கான காரணம் என்ன என்பது குறித்து அமீர் விரிவாக பேசியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் வாக்கர் யூனிஸ் ஆகியோரை குறிப்பிட்டு பேசிய அமீர், 'பணம் சம்பாதிக்க வேண்டி டி 20 போட்டிகளில் மட்டும் நான் விளையாட விருப்பப்படுவதாகவும், இதனால் டெஸ்ட் போட்டிகளில் ஆட எனக்கு விருப்பமில்லை என்பது போன்றும் என் மீது தவறான பிம்பம் ஒன்றை உருவாக்கி வைத்துள்ளனர். நான் எடுத்துள்ள முடிவு மிகவும் கடினமான ஒன்று தான். ஆனால், இந்த முடிவை நான் எடுத்தது இங்கு என்னென்ன பிரச்சனைகள் நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்' என்றார். 

தற்போது பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி 20 தொடரில் தன்னை தேர்வு செய்யாதது குறித்து அமீர் அதிகம் மனம் வருந்தியுள்ளார். 'நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடருக்கான அணியில் என்னை தேர்வு செய்யாமல் போனதை எண்ணி நான் மிகவும் வேதனையடைந்தேன். தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராக எதுவும் இல்லை என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், நான் அணியில் தேர்வாகாதது குறித்தோ, அல்லது என்னைப் பற்றிய திட்டங்கள் குறித்தோ, மூத்த வீரர் என்ற அடிப்படையில் கூட என்னிடம் நேரடியாக தெரிவிக்க மாட்டார்கள். இங்கு இது தான் நடக்கிறது.

பிஎஸ்எல் கிரிக்கெட்டில் ஹாட் ட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தினேன். ஆசிய கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் சிறப்பாக பந்து வீசினேன். ஐசிசி பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தற்போதும் நான் இருக்கிறேன். இதற்கு மேல் நான் என்ன செய்ய வேண்டும்?. நான் செய்த தவறுக்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டேன். அதற்கான தண்டனையும் அனுபவித்து விட்டேன். ஆனால், அதன் பிறகு என்னால் முடிந்தது வரை பாகிஸ்தான் அணிக்கு சிறப்பான பங்கை ஆற்றி விட்டேன்.

எனக்கு சுயமரியாதை உள்ளது. அதில் சமரசம் செய்து கொள்ள என்னால் முடியாது. மரியாதை கொடுத்து மரியாதை வாங்குவதில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளவன் நான்' என தனது ஓய்வுக்கான காரணம் குறித்து மிகவும் உருக்கமாக தகவலை வெளியிட்டுள்ளார். அமீரின் ஓய்வு அறிவிப்பு பாகிஸ்தான் அணி நிர்வாகத்தின் மீது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்