"'பத்து' வருசத்துக்கு முன்னாடி உள்ள சம்பள பாக்கியே இன்னும் வரல.." வெளிச்சத்திற்கு வந்த 'உண்மை'??.. 'பிசிசிஐ' மீது எழுந்த 'குற்றச்சாட்டு'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை, மகளிர் கிரிக்கெட் டி 20 உலக கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்றிருந்தது.

"'பத்து' வருசத்துக்கு முன்னாடி உள்ள சம்பள பாக்கியே இன்னும் வரல.." வெளிச்சத்திற்கு வந்த 'உண்மை'??.. 'பிசிசிஐ' மீது எழுந்த 'குற்றச்சாட்டு'!!

இந்த தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்த நிலையில், கோப்பையை ஆஸ்திரேலிய அணி தட்டிச் சென்றது. இந்திய அணி இரண்டாம் இடம் பிடித்திருந்த நிலையில், அந்த அணிக்கு 500,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக ஐசிசி அறிவித்திருந்தது.

மேலும், இந்த பரிசுத் தொகையை பிசிசிஐயிடம், ஐசிசி கடந்த ஆண்டே வழங்கியதாக கூறப்படும் நிலையில், அதனை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கு இதுவரை பகிர்ந்து வழங்கவில்லை. இந்த பணத்தினை இந்த வார இறுதிக்குள் தான் வீராங்கனைகளுக்கு அளிக்கவுள்ளதாக, சமீபத்தில் பிசிசிஐயை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

இதனால், கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு முன்னர் நடைபெற்றிருந்த தொடருக்கான பரிசுத் தொகையே இனிமேல் தான் தகுந்தவர்களுக்கு போய் சேரவுள்ளதால், இந்த செய்தி தற்போது வெளிச்சத்திற்கு வந்து, கடும் பரபரப்பை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த ஒரு பூதாகரத்தை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாட்ஜ் (Brad Hodge), தற்போது தெரிவித்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பரிசுத் தொகை பற்றி, 'Telegraph Cricket', தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்திருந்தது.

இதன் கீழ் கமெண்ட் செய்த பிராட் ஹாட்ஜ், 'பத்து ஆண்டுகளுக்கு முன் ஐபிஎல் தொடரில் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காக ஆடிய வீரர்களுக்கு, சம்பளத்தில் இன்னும் 35 % கடன் பாக்கியுள்ளது. அந்த பணத்தை பிசிசிஐ கண்டுபிடித்து தர ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா?' என குறிப்பிட்டுள்ளார்.

 

ஏற்கனவே, மகளிர் அணிக்கான பரிசுத் தொகையே இன்னும் வழங்கப்படாத தகவல் வெளியாகி, பிசிசிஐ மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்னுள்ள சம்பள பாக்கி பற்றி, ஐபிஎல் அணியில் ஆடிய ஆஸ்திரேலிய வீரர் ஹாட்ஜ் இப்படி ஒரு கமெண்ட் செய்துள்ளது, பிசிசிஐ மீது இன்னும் அதிக கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

மற்ற செய்திகள்