வெற்றி வாய்ப்பு இருந்தும்.. நழுவ விட்ட இந்திய அணி.. ராகுல் எடுத்த அந்த முடிவு தான் எல்லாத்துக்கும் காரணம்.. கடுப்பான ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே, நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி, 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி வாய்ப்பு இருந்தும்.. நழுவ விட்ட இந்திய அணி.. ராகுல் எடுத்த அந்த முடிவு தான் எல்லாத்துக்கும் காரணம்.. கடுப்பான ரசிகர்கள்

முன்னதாக, இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 -1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றி அசத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி, இன்று நடைபெற்றது.

டெஸ்ட் உள்ளிட்ட அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும், கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில், அவருக்கு பதிலாக டி 20 மற்றும் ஒரு நாள் போட்டியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டார்.

அடித்து நொறுக்கிய ஜோடி

ஆனால், ரோஹித் ஷர்மா முழு உடற்தகுதியுடன் இல்லாத காரணத்தினால், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் கேப்டனாக கே எல் ராகுல் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆடிய அந்த அணியில், ஆரம்பத்தில் சில விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. ஆனால், கேப்டன் பாவுமா மற்றும் வெண்டர் டுசன் ஆகியோர் சிறப்பாக ஆடி சதம் அடித்தனர்.

சரிந்த இந்திய அணி

204 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த இவர்கள், 296 ரன்கள் என்ற சிறப்பான ரன்னையும் எட்ட உதவினர். இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். ஆனால், அவர்கள் அவுட்டான பிறகு, மிடில் ஆர்டர் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன.

முன்னிலை

இறுதியில் ஷர்துல் தாக்கூர் அதிரடியாக ஆடி அரை சதமடித்த போதும், இந்திய அணியால் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு, 265 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக, தென்னாப்பிரிக்க அணி, 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ரசிகர்கள் ஏமாற்றம்

இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் பற்றி, ரசிகர்கள் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டியில் கேப்டனாக கே எல் ராகுல் எடுத்த சில முடிவுகளை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்திய அணியின் இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர், இன்று ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார். ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை அணியில் எடுத்ததால், அவர் பந்து வீசுவார் என அனைவரும் கருதினர்.

ராகுல் செய்த தவறு?

ஆனால், அவருக்கு ஒரு ஓவரை கூட ராகுல் வழங்கவில்லை. தென்னாப்பிரிக்க அணியின் முதல் 4 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சாய்ந்த நிலையில், பாவுமா - வெண்டர் டுசன் ஆகியோர் இந்திய அணியின் பந்து வீச்சினை அடித்து நொறுக்கினர்.

அந்த சமயத்திலாவது, வெங்கடேஷ் ஐயரை பந்து வீசச் செய்திருக்கலாம். ஆனால், ராகுல் அந்த முடிவினை எடுக்கவில்லை. அப்படி வாய்ப்பு கொடுத்து, ஒரு வேளை விக்கெட் கிடைத்திருந்தால், இலக்கு குறைந்து, இந்திய அணி வெற்றி பெறவும் சில சமயம் வாய்ப்பு உருவாகியிருக்கலாம்.

ரசிகர்கள் கருத்து

பேட்டிங்கிற்காக மட்டுமே வேண்டி, வெங்கடேஷை அணியில் எடுத்திருந்தால், அதற்கு பதிலாக வெளியே இருக்கும் ருத்துராஜ், இஷான் கிஷான் அல்லது சூர்யகுமார் ஆகியோரை களமிறக்கி இருக்கலாம் என்றும், அவர்கள் இந்திய அணி இலக்கை எட்டவாவது உதவி இருப்பார்கள் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே, ராகுலின் கேப்டன்சியில் அதிக அளவு திறனும், அனுபவமும் இல்லை என கூறப்பட்டு வரும் நிலையில், முதல் ஒரு நாள் போட்டியிலேயே கடுமையான விமர்சனத்தை ராகுல் சந்தித்து வருவதால், விரைவில் தன்னிடம் உள்ள தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் உள்ளது.

மிடில் ஆர்டர் சிக்கல்

அதே போல, இந்திய அணியின் தோல்விக்கான இன்னொரு காரணமாக பார்க்கப்படுவது, மிடில் ஆர்டர் பேட்டிங். சமீப காலமாகவே, இந்திய அணியில் பெரிய பிரச்சனையாக இது இருக்கிறது. தொடர்ச்சியாக, ஒரே வீரர்களும் களமிறங்கப்பட்டு வராமல், மாறி மாறி வீரர்கள் களமிறக்கப்படும் நிலையில், மிடில் ஆர்டர் வரிசையை சீர் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

அதனை சரி செய்தால் மட்டுமே, இனி வரும் போட்டிகளில் இந்திய அணியால், சிறப்பான ஆட்டத்தை வழங்கி, வெற்றிகளைக் குவிக்க முடியும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

VIRAT KOHLI, KL RAHUL, IND VS SA, ஷிகர் தவான், விராட் கோலி, கே எல் ராகுல்

மற்ற செய்திகள்