"'8 - 9' நாளைக்கு சரியா தூங்கவேயில்ல.. என் 'கிரிக்கெட்' வாழ்க்கையே 'போச்சு'ன்னு நெனச்சேன்.." வேதனையுடன் மனம் திறந்த 'அஸ்வின்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர், சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான காரணத்தினால், பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

"'8 - 9' நாளைக்கு சரியா தூங்கவேயில்ல.. என் 'கிரிக்கெட்' வாழ்க்கையே 'போச்சு'ன்னு நெனச்சேன்.." வேதனையுடன் மனம் திறந்த 'அஸ்வின்'!!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள், வேறு ஏதேனும் நாடுகளில் வைத்து நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. முன்னதாக, கொரோனா தொற்றின் காரணமாக, ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படுவதற்கு முன்பாகவே, டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin), ஐபிஎல் போட்டியில் இருந்து பிரேக் எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

தனது  குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், தூரத்து உறவினர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்ததால், அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டி, பாதியில் விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்திலும் அஸ்வின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்த சமயத்தில், தான் மன ரீதியாக எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தேன் என்பது பற்றி அஸ்வின் தற்போது மனம் திறந்துள்ளார். 'நான் இருக்கும் பகுதியிலுள்ள பெரும்பாலானோர், கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்தனர். எனது சகோதரர்கள் சிலர் கூட, கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனை நினைத்து, ஐபிஎல் தொடருக்கு மத்தியில், கிட்டத்தட்ட 8 - 9 நாட்கள் வரை நான் சரிவர தூங்கவில்லை. தூக்கம் இல்லாமல், ஐபிஎல்  போட்டிகளில் களமிறங்கி ஆடியது, எனக்கு அதிக மன அழுத்தத்தைக் கொடுத்தது. அதன் பிறகு தான், ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகலாம் என முடிவு செய்தேன். நான் ஐபிஎல் போட்டிகளை விட்டு பாதியில் விலகுவதால், இனிமேல் எனக்கு கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்குமா என்று கூட நான் யோசித்தேன்.

ஆனால், அந்த இக்கட்டான சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படலாம் என முடிவு செய்து பின் விலகினேன். தொடர்ந்து, எனது வீட்டில்  உள்ளவர்கள், மெல்ல மெல்ல குணமடைந்து வந்த போது, மீண்டும் ஐபிஎல் போட்டிகள் ஆடலாம் என கருதினேன். ஆனால், அதற்குள் ஐபிஎல் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டது' என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்