'சின்னத்திரை நடிகை தற்கொலை...' 'காதலன்' திருமணத்திற்கு மறுத்ததால் 'விபரீதம்...' 'செல்பி வீடியோ' ஆதாரத்துடன் 'காதலனுக்கு வலைவீச்சு...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணத்திற்கு மறுத்ததால் கன்னட சின்னத்திரை நடிகை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷம் குடித்தப்படி அவர் செல்பி வீடியோவில் தனது காதலன் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில் தலைமறைவான காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

'சின்னத்திரை நடிகை தற்கொலை...' 'காதலன்' திருமணத்திற்கு மறுத்ததால் 'விபரீதம்...' 'செல்பி வீடியோ' ஆதாரத்துடன் 'காதலனுக்கு வலைவீச்சு...'

பெங்களூரு சுத்தகுண்டே பாளையா பகுதியில், கிருஷ்ணமூர்த்தி லே-அவுட் என்ற பகுதியில் சின்னத்திரை நடிகை சந்தனா (வயது 29) வசித்து வந்தார். இவர், கன்னட தனியார் தொலைக்காட்சிகளில் பல்வேறு நாடகங்களிலும், சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கும் தினேஷ் என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்டது. இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்தனர்.

இந்த நிலையில், தனது வீட்டில் இருந்த நடிகை சந்தனா திடீரென்று விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிய சந்தனாவை, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்தனா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி அறிந்ததும் சுத்தகுண்டே பாளையா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது சந்தனா தான் தற்கொலை செய்தவற்காக விஷத்தை குடிப்பதை தனது செல்போனில் செல்ஃபி வீடியோவாக எடுத்து வைத்திருந்தார். அதில் தன்னுடைய தற்கொலைக்கு காதலன் தினேஷ் தான் காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

சந்தனாவும், தினேசும் 5 ஆண்டுக்கும் மேலாக காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு 2 பேரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். அத்துடன் சந்தனா, தினேசுக்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்திருந்தார்கள்.

தற்போது சந்தனாவை திருமணம் செய்ய தினேஷ் மறுத்ததால் மனம் உடைந்த சந்தனா விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுத்தகுண்டே பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தினேசை வலைவீசி தேடிவருகிறார்கள்.

குறிப்பு  : தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்