உணவின்றி தவித்த ஏழைகள்!.. 8 நாட்களில் ரூ.6 லட்சம் நிதி திரட்டிய... 6ம் வகுப்பு மாணவி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஊரடங்கால் உணவு இல்லாமல் தவித்த ஏழைகளுக்கு, 6-ம் வகுப்பு மாணவி ரித்தி ரூ.6 லட்சம் நிதி திரட்டி உதவிகள் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.

உணவின்றி தவித்த ஏழைகள்!.. 8 நாட்களில் ரூ.6 லட்சம் நிதி திரட்டிய... 6ம் வகுப்பு மாணவி!

ஐதராபாத் நகரில் உள்ள சர்வதேச பள்ளிக்கூடம் ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவி, ரித்தி. கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு உதவி செய்ய எண்ணினார்.

இதையடுத்து மாணவி ரித்தி, தான் சேமித்து வைத்து இருந்த பணத்துடன், உறவினர், நண்பர்கள் என பலரை அணுகினார். 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சேர்ந்தது. உடனே உதவி வழங்க முடிவு செய்தனர்.

ஒரு பையில் ரூ.650 மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை அடைத்தனர். குறிப்பாக 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ உப்பு, 200 கிராம் மிளகாய்ப் பொடி, 2 சோப்பு பார்கள் அந்தப் பையில் இடம்பெற்று இருந்தன.

முதற்கட்டமாக 200 பேருக்கு உதவி செய்ய முடிவு செய்தனர். அதன்படி 200 பைகளில் உதவிப் பொருட்களை எடுத்துக்கொண்டு, செர்லிங்கம்பள்ளி என்ற பகுதிக்கு சென்றனர். போலீசார் உதவியுடன் அவற்றை வினியோகம் செய்தனர்.

அப்போது பலருக்கு உதவிப் பொருட்கள் கிடைக்கவில்லை. பலர் பசியால் வாடுவதும் தெரியவந்தது. இதைப் பார்த்து மனம் இரங்கிய மாணவி, மேலும் கூடுதலாக நிதி திரட்ட விரும்பினார். அவருக்கு பெற்றோரும் உதவினார்கள்.

அதன்படி இணையதளம் மூலம் நிதி திரட்ட முடிவு செய்தார். மாணவி ரித்தி, தான் செய்துவரும் உதவி குறித்து இணையதளத்தில் பதிவிட்டதுடன், உதவி கேட்டு வேண்டுகோள் விடுத்தும் பேசினார்.

அவரது செயலை பாராட்டி உதவிகள் குவியத் தொடங்கின. 8 நாட்களில் ரூ.6 லட்சத்து 20 ஆயிரத்தை, நிதி எட்டியது. அதற்கு உதவிப் பொருட்கள் வாங்கி ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் வினியோகம் செய்ததாக மாணவி ரித்தியின் பெற்றோரான ராம்குமார், சில்பா ஆகியோர் பெருமிதமாக தெரிவித்தனர்.