'அரசு உத்தரவை' காற்றில் பறக்கவிட்ட 'ஐ.டி. நிறுவனம்...' பாதிக்கப்பட்ட '13 ஆயிரம் ஊழியர்கள்...' 'நோட்டிஸ் அனுப்பி கடும் எச்சரிக்கை...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஊழியர்களுக்கான சம்பளத்தை குறைத்தாலும், அவர்களை வேலையிலிருந்து நீக்கினாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெக் மகிந்த்ரா நிறுவனத்தை தொழிலாளர் ஆணையர் அலுவலகம் எச்சரித்துள்ளது.

'அரசு உத்தரவை' காற்றில் பறக்கவிட்ட 'ஐ.டி. நிறுவனம்...' பாதிக்கப்பட்ட '13 ஆயிரம் ஊழியர்கள்...' 'நோட்டிஸ் அனுப்பி கடும் எச்சரிக்கை...'

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்படக்கூடாது எனவும், ஊழியர்களை வேலையில் இருந்து வெளியேற்றக்கூடாது எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

எனினும், கொரோனா பாதிப்பு நெருக்கடிக்கு மத்தியில், புனேவில் உள்ள டெக் மகிந்த்ரா நிறுவனம் தனது ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஐடி ஊழியர்களின் நலனுக்காக இயங்கி வரும் தேசிய ஐடி ஊழியர் செனட்டுக்கு (NITES), இதுகுறித்து புகார்கள் வந்தன. 

இப்புகார்களின் அடிப்படையில் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை தேசிய ஐடி ஊழியர் செனட் நாடியுள்ளது. இந்த புகார் கடிதத்தில், “மே 6ஆம் தேதியன்று டெக் மகிந்த்ரா தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும் ஷிஃப்ட் அளவன்ஸ் மே 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக டெக் மகிந்த்ராவின் 13,000 ஊழியர்களுக்கான ஊதியம் குறைந்துள்ளது. மகாராஷ்டிர அரசின் உத்தரவுகளை, விதிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும் டெக் மகிந்த்ரா நிறுவனம் மீறியுள்ளது. ஆகவே இந்நிறுவனத்தின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக தொழிலாளர் ஆணையர் அலுவலகம் டெக் மகிந்த்ரா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மஹாராஷ்ட்ரா அரசின் உத்தரவை மதித்து ஊழியர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், டெக் மகிந்த்ரா தனது ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கக்கூடாது எனவும், அவர்களது சம்பளத்தை குறைக்கக்கூடாது எனவும், மீறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிலாளர் ஆணையர் அலுவலகம் எச்சரித்துள்ளது.