‘கையில காசு இல்ல’!.. ‘பசி’.. பெற்ற தாயை வீட்டைவிட்டு துரத்திய ‘மகன்’.. ஊரடங்கில் நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெற்ற மகனால் வீட்டைவிட்டு துரத்தப்பட்ட மூதாட்டியை ரயில்வே அதிகாரி ஒருவர் சாப்பாடு கொடுத்து பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

‘கையில காசு இல்ல’!.. ‘பசி’.. பெற்ற தாயை வீட்டைவிட்டு துரத்திய ‘மகன்’.. ஊரடங்கில் நடந்த சோகம்..!

மும்பையில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருபவர் தினேஷ் குமார் துபே. இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு உடல்நலக்குறைவால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதை கேள்விப்பட்ட அவரது தாய் லீலாவதி கேதர்நாத் துபே (70) துடித்துப்போயுள்ளார். உடனே ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்னரே டெல்லியில் இருந்து மும்பைக்கு சென்று மகனை அருகில் இருந்தே கவனித்து வந்துள்ளார். தாயின் அரவணைப்பால் தினேஷ் மெல்ல மெல்ல உடல்நலம் தேறியுள்ளார்.

இதனை அடுத்து தாயுடன் காரணமின்றி அடிக்கடி சண்டை போட ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில் தாய் லீலாவதியை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார். இதில் மனவேதனையடைந்த லீலாவதி மும்பை மஹூல் நகரில் இருந்து பாந்த்ரா வரை கிட்டத்தட்ட 13 கிலோமீட்டர் நடந்தே வந்துள்ளார். அவர் கையில் பணம் இல்லாததால் பசியால் அவதிப்பட்டு சாலையோரமாக உள்ள மரத்தடியில் சோர்வாக கிடந்துள்ளார். அப்போது அந்த வழியே லாரியில் சென்ற சிலர் லீலாவதிக்கு சாப்பிட பிஸ்கட்டுகளும், தண்ணீரும் கொடுத்து உதவியுள்ளனர்.

லீலாவதி சாலையில் உணவின்றி அவதிப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த மும்பை ரயில்வே போக்குவரத்து அதிகாரி சுஹானி மிஸ்ரா, விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று மூதாட்டி லீலாவதியை மீட்டு தங்குவதற்கு இடமும், உணவும் கொடுத்துள்ளார். இதனை அடுத்து மூதாட்டியின் சொந்த ஊரான டெல்லிக்கு செல்ல ரயிலில் ஏசி பெட்டியில் டிக்கெட் புக் செய்து பத்திரமாக அனுப்பி வைத்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த மூதாட்டி லீலாவதி, ‘என் மகனுடன் தங்கியிருந்த நாட்களில் நான் சாப்பிட்ட உணவுக்கு பணத்தை கொடுத்து விட்டேன். ஆனாலும் அவன் கடந்த 3 மாதங்களாக என்னை அடித்து துன்புறுத்தி வீட்டைவிட்டு வெளியேற சொன்னான். அதனால் வேறு வழியில்லாமல் நான் வீட்டைவிட்டு வெளியேறினேன். எனக்கு எங்கே செல்வது என்றே தெரியவில்லை. என்னிடம் பணம் கூட இல்லை. லாரியில் சென்றவர்கள் எனக்கு பிஸ்கட்டும், தண்ணீரும் கொடுத்தனர். அதன்பின்னர் என்னை மீட்ட ரயில்வே அதிகாரிதான் எனக்கு உணவும், தங்குவதற்கு இடமும் கொடுத்தார். அதில் ஒரு அதிகாரி என் மகன் என்னிடம் வந்து பேசுவார் என கூறினார். இப்போது ரயில்வே அதிகாரிகள் எனது குடும்பத்தினர் ஆகிவிட்டனர். அவர்களுக்காக நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்’ என கண்கலங்க தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்