‘கை, கால்கள் கட்டிய நிலையில் சடலம்’ ‘துப்பு கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்’.. அதிர வைத்த பெட்ரோல் பங்க் ஓனர் கொலை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் பணத்துக்காக திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘கை, கால்கள் கட்டிய நிலையில் சடலம்’ ‘துப்பு கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்’.. அதிர வைத்த பெட்ரோல் பங்க் ஓனர் கொலை..!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கைப்பமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (68). இவர் சொந்தமாக பெட்ரோல் பங்க் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு வழக்கம்போல இரவு பெட்ரோல் பங்கில் இருந்து காரில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மனோகரின் மகள் போன் செய்துள்ளார். ஆனால் போனில் பேசிய மர்ம நபர், மனோகர் காரில் தூங்கிக்கொண்டிருக்கிறார், சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவார் எனக் கூறி போனை வைத்துள்ளனர்.

ஆனால் மறுநாள் காலைவரை மனோகரன் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் அளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சாலையோரமாக மனோகர் இறந்துகிடப்பதாக தகவல் வந்துள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மனோகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அடுத்து திருவரங்காடு ரயில் நிலையம் அருகே மனோகரின் கார் நிற்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனிடையே மனோகர் மூச்சு திணறி இறந்ததாக பிரேத பரிசோதனை முடிவில் தெரிந்துள்ளது.

இதனால் தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது 3 பேர் நீண்ட நேரமாக மனோகரை நோட்டமிட்டு அவர் வீடு திரும்பும்போது பின் தொடர்ந்து சென்றுது தெரியவந்துள்ளது. இதனிடையே கேட்டரிங் ஊழியரான மனோகர் பக்கத்து வீட்டுக்காரர், சம்பவத்தன்று மனோகரின் காரை சாலையில் பார்த்துள்ளார். வழக்கத்துமாறாக கார் அதுவேகமாக சென்றுள்ளது. மனோகர் காரை வேகமாக ஓட்டமாட்டாரே என எண்ணி இதுகுறித்து போலீசாரிடம் துப்பு கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவதன்று மூன்று பேரும் ஒரே பைக்கில் வந்துள்ளனர். அப்போது எதிர் திசையில் வந்த மனோகரின் காரின் மீது மோதியுள்ளனர். அதில் ஒருவர் கீழே விழுந்து அடிப்பட்டது போல் நடித்துள்ளார். இதனால் மனோகர் காரை விட்டு கீழே இறங்கியுள்ளார். உடனே மனோகரை காருக்குள் தள்ளிவிட்டு மூவரும் காரில் ஏறியுள்ளனர். மனோகர் சத்தம்போடாமல் இருக்காதவாறு வாய், கை கால்களில் டேப்பால் கட்டியுள்ளனர். ஒருவர் காரை ஓட்ட மற்ற இருவரும் மனோகரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மனோகர் தினமும் பெட்ரோல் பங்கில் ஆகும் கலெக்‌ஷனை வீட்டுக்கு எடுத்து செல்வது வழக்கம். இதனை அறிந்துதான் மூவரும் கொள்ளை முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆனால் சம்பவதன்று மனோகர் பணம் எடுத்து செல்லாமல் சென்றதாக கூறப்படுகிறது.

சுமார் 2 மணிநேரமாக மனோகரை காருக்குள் வைத்து பணம் கேட்டு துன்புறுத்தியுள்ளனர். இதில் மனோகர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் மனோகரின் சடலத்தை சாலையோரமாக போட்டுவிட்டு காரை மற்றொரு இடத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். கேரளாவில் இதுபோன்ற சம்பவங்களால் அம்மாநில மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

KERALA, CRIME, PETROLPUMP, OWNER, MURDER