'ஜெர்மனியில் பி.எச்.டி படிப்பு'... 'ஆனா கிச்சனில் சமையல்'... 'யார் இந்த தாக்கூர்'?... நாட்டையே திரும்பிப் பார்க்க வச்ச 29 வயது இளைஞர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இளைஞர்களால் என்ன சாதித்து விட முடியும் எனக் கேட்கும் பலருக்கு, அவர்கள் கண் முன்பே சாதித்துக் காட்டி இருக்கிறார், தாக்கூர் என்ற 29 வயது இளைஞர்.

'ஜெர்மனியில் பி.எச்.டி படிப்பு'... 'ஆனா கிச்சனில் சமையல்'... 'யார் இந்த தாக்கூர்'?... நாட்டையே திரும்பிப் பார்க்க வச்ச 29 வயது இளைஞர்!

கொல்கத்தாவைச் சேர்ந்தவர்  டெபோஜித் தாக்கூர். இவர் ஜெர்மனியில் உள்ள ட்ரையர் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பினார். இந்நிலையில் ஒரு ஆராய்ச்சிக்காக டெல்லி சென்ற நிலையில், கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநில எல்லைகள் மூடப்பட்ட நிலையில், டெல்லி பயணத்தின் பாதியிலேயே சிக்கிக் கொண்டார். ஊரடங்கு நேரத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மற்றும் ஏழைகள் படும் கஷ்டத்தை நேரில் பார்த்த அவர், அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது.

இதையடுத்து மார்ச் 29 அன்று, சமூக வலைத்தளங்கள் மூலமாக, ஒன்றுபட்டு இணைந்து சேவை செய்ய ‘இளைஞர்களே வாருங்கள்’ என அழைப்பு விடுத்தார். ஆனால் அதற்கு யாரும் முன்வரவில்லை. வெகு சிலரே கூடினார்கள். ஆனால் அவர் எதிர்பார்க்காத வேளையில், அமெரிக்கா, லண்டன், ஜெர்மனி என பலர் இந்தக் குழுவிற்கு உதவ முன்வந்தனர். முன்வந்த அனைவரும் மாணவர்கள். அவர்கள் தங்களால் முடிந்த அளவிற்குப் பணத்தை அனுப்பி வைத்தார்கள்.

பண உதவி செய்ய முடியாதவர்கள், இந்தச் சேவையை ஒரு செய்தியாக மற்றவர்களிடம் பரப்புங்கள் எனக் கூறியுள்ளார் தாக்கூர். அதற்கு நல்ல பலன் கிடைக்க, டெல்லி மற்றும் மேற்கு வங்கம் முழுவதும் 650 தன்னார்வலர்கள் இணைந்து ஒரு வலைப்பின்னல் உருவானது. அதை Quarantined Student-Youth Network என்று அழைக்க முடிவு செய்தார் தாகூர். அதன் மூலம் 26 தற்காலிக சமையலறைகளை அமைத்து இதுவரை 10,000 ரேஷன் தொகுப்புகளை விநியோகித்துள்ளனர். மேலும் 100,000க்கும் மேற்பட்ட சமைத்த உணவை வழங்கியுள்ளனர்.

ஜெர்மனியில் பி.எச்.டி படித்த தாக்கூர் ஏழைகளுக்காக சமையலறையில் இறங்கி வேலை செய்ததுடன், களத்திற்குச் சென்று ஏழைகளுக்கு உணவளித்தார். இந்த சூழ்நிலையில் மேற்கு வங்கத்தில் ஆம்பான் சூறாவளி தாக்க, அவர்களுக்கும் நிதி திரட்ட முடிவு செய்தார்கள். அதன் பலனாக மே 27க்குள், இக்குழு ரூ .60 லட்சம் வசூலித்தது. ஜூன் 14க்குள், இது ரூ .95 லட்சமாக உயர்ந்தது. இந்த சாதனைகள் அனைத்துக்கும் முதல் விதைப் போட்டவர் தாக்கூர்.

தான் படித்த படிப்பு என்பது இந்த சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பயன்பட்டால், அதுவே சிறந்த கல்வியாக இருக்க முடியும் என்பதற்கு உதாரணமாகி இருக்கிறார் தாக்கூர். அவரை பாராட்டித் தனிக் கட்டுரையை ஒன்றை வெளியிட்டு கௌரவித்திருக்கிறது, ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

மற்ற செய்திகள்