‘சிங்கம்’ பட பாணியில் குற்றவாளியை பிடித்த பெண் ஐபிஎஸ்..! குவியும் பாராட்டுக்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் பெண் ஐபிஎஸ் அதிகாரி மெரின் ஜோசப் என்பவர் குற்றவாளியை பிடிக்க சவுதி அரேபியா வரை சென்ற சம்பவம் வியக்க வைத்துள்ளது.

‘சிங்கம்’ பட பாணியில் குற்றவாளியை பிடித்த பெண் ஐபிஎஸ்..! குவியும் பாராட்டுக்கள்..!

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த சுனில் குமார் (38) என்பவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017 -ம் ஆண்டு விடுமுறைக்காக தனது சொந்த ஊரான கொல்லத்திற்கு வந்துள்ளார். அப்போது தனது நண்பரின் உறவு பெண்ணான 13 வயது சிறுமியை பல நாட்களான பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த விசயத்தை பெற்றோரிடம் சொல்ல அந்த சிறுமி முதலில் பயந்துள்ளார். பின்னர் சில மாதங்கள் கழித்து தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் அப்பெண் கூறியுள்ளார். இதற்கிடையே சுனில் குமார் மீண்டும் சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து சுனில் குமாரை தேடப்படும் குற்றவாளியாக கேரளா காவல்துறை அறிவித்துள்ளது.

ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் சிறுமியின் பெற்றோர் மகிளா நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கேரளா காவல்துறை வழக்கை பாதியிலேயே நிறுத்தி கிடப்பில் போட்டுள்ளது.

இந்நிலையில் கொல்லம் பகுதியின் புதிய காவல்துறை கமிஷனராக மெரின் ஜோசப் என்ற பெண் அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். இவர் கிடப்பில் உள்ள பல வழக்குகளை திரும்ப விசாரிக்க ஆரம்பித்துள்ளார். அப்போது கொல்லம் பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு பாதியில் விடப்பட்டதை அறிந்து மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சுனில் குமார் சவுதி அரேபியாவில் இருப்பதை அறிந்து அங்கு செல்ல முடிவெடுத்துள்ளார். இதற்காக உயர் அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்று சிங்கம் -2 படத்தில் வரும் சூர்யாவின் கதாபாத்திரம் போல தனிப்படையுடன் சவுதி அரேபியா சென்று சுனில் குமாரை கைது செய்து வந்துள்ளார். இந்த துணிச்சலான முடிவால் ஐபிஎஸ் அதிகாரி மெரின் ஜோசப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

KERALA, IPS, MERIN JOSEPH, SAUDI