'இனிமேல் பொறுக்க முடியாது'... 'கேஷ்பேக் கொடுப்பதை தயவு செஞ்சு தடுங்க மேடம்'... நிதி அமைச்சருக்கு பறந்த கடிதம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதப்பட்டுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'இனிமேல் பொறுக்க முடியாது'... 'கேஷ்பேக் கொடுப்பதை தயவு செஞ்சு தடுங்க மேடம்'... நிதி அமைச்சருக்கு பறந்த கடிதம்!

இந்தியாவில் அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இதில் வர்த்தகம் நடைபெறும் நிலையில் இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகைகளைக் கொடுப்பது வழக்கம். இந்த சூழ்நிலையில் இணைய வர்த்தக நிறுவனங்களுக்கு வங்கிகள் நேர்மையற்ற முறையில் கேஷ்பேக் ஆஃபர் வழங்குவதைத் தடை செய்ய வேண்டும் என்று அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ''ணைய விற்பனை நிறுவனங்களுடன் குறிப்பாக அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களுடன் நெறியற்ற வகையில் பல்வேறு வங்கிகள் முழுவதுமாக கூட்டுவைத்துகொண்டு தொழில் செய்து வருகிறது. இதற்கு எதிராக நாங்கள் உங்களுக்குக் கடிதம் எழுத தள்ளப்பட்டுள்ளோம் . இது எங்களுக்கே வேதனையாக உள்ளது. வங்கிகளின் கூட்டணி, புனிதமற்ற உறவு, வங்கிகளால் கடைப்பிடிக்கப்படும் அதிகபட்ச பாகுபாடான நடைமுறைகள், பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டு ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் சிறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

உடனடி பணம் விவகாரத்தில் வங்கிகளின் செயல்பாடுகள் இந்திய மக்களுக்கு எதிரான பாகுபாடான நடவடிக்கையாகும். அது, அரசியலமைப்புச் சட்டம் 19, 301 மற்றும் ரிசர்வ் வங்கியின் வங்கிகளுக்கான வெளிப்படையான செயல்பாட்டுக்கான பிரிவு 3(1) விதிகளுக்கு எதிரானது ஆகும். இந்த குறிப்பிட்ட வழக்கில் ஸ்டேட் பாங்க், பரோடா வங்கி, ஐ.சி.சி.ஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, சிட்டி வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, கோடேக் மகேந்திரா வங்கி, எச்.எஸ்.பி.சி வங்கி, ஆர்.பி.எல் வங்கி உள்ளிட்ட வங்கிகள் புனிதமற்ற முறையில் இணைய வர்த்தக நிறுவனங்களுடன் குறிப்பாக அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டு வைத்து அவர்கள் வங்கிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும்போது 10 சதவீத கேஷ்பேக் மற்றும் பிற சலுகைகள் வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அதே குறிப்பிட்ட பொருள்களை இணையம் அல்லாத முறையில் பிற கடைகளில் அதே குறிப்பிட்ட வங்கியின் கார்டை பயன்படுத்தி வாங்கும்போது அந்த குறிப்பிட்ட வங்கிகள் கேஷ்பேக் உள்ளிட்ட பிற சலுகைகளை வழங்கவில்லை. வங்கிகள் இந்தச் செயல்கள், அரசியலமைப்புச் சட்டம் 19, 301-வது பிரிவுகள் அனைத்து இந்தியக் குடிமகன்களும் தொழில் செய்வதற்கான உரிமையை மீறுகிறது. மேலும் வங்கிகள் உடனடி 10 சதவீத கேஷ்பேக் ஆஃபர் வழங்குவது போட்டிச் சட்டம் 2002, பிரிவு 3-க்கு எதிரானது.

இந்தியாவைப் பொறுத்தவரை இணைய நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு அந்த நிறுவனத்தில் பொருள்கள் வாங்கும்போது மட்டும் சலுகை வழங்குவது முறையற்றது. வங்கிகள் இணைய வர்த்தக நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு நியாயமற்ற வகையில் இந்த நாட்டின் கோடிக்கணக்கான சிறு குறு தொழிலாளர்களுக்கு எதிராகத் தொழில் நடைமுறையைச் செய்கின்றன என்று நாங்கள் நம்புவதற்கு உறுதியான காரணங்கள் இருக்கின்றன.

மிகமுக்கியமாக ரிசர்வ் வங்கிகள் ரெப்போ ரேட்டை குறைத்தாலும் கூட வங்கிகள் அதனுடைய வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைப்பதில்லை. இந்த வங்கிகள் சாதாரண குடிமகன்களுக்கு 0.5 சதவீத சலுகைகள் கூட அளிப்பதில்லை. ஆனால், திடீரென்று பெரிய இணைய வர்த்தக நிறுவனங்களுக்கு 10 சதவீதம் வரை கேஷ்பேக், தள்ளுபடி சலுகைகளை வழங்குகின்றன. இதில் வேதனையான விஷயம், இந்திய ரிசர்வ் வங்கியும் வங்கிகளின் நேர்மையற்ற நடைமுறைக்கு எதிராகக் கேள்வியை எழுப்பாமல் இருப்பது தான்.

இந்த சூழ்நிலை தான் இந்த விவகாரம் குறித்து உங்களுக்குக் கடிதம் எழுதத் தூண்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் உடனடியாக கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுத்து இந்த செயல்பாட்டைத் தடுக்க வேண்டும். இணைய வர்த்தக நிறுனவங்களுக்கு வங்கிகளால் அதிக அளவுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடிகள் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படவேண்டும்’ என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்