“ஹான்யாவுக்கு ஆறுதல் சொல்லதான் வார்த்தையே இல்ல!”.. திருமண கனவுகளுடன் வந்த இளைஞர் விமான விபத்தில் பலி.. கண்ணீரில் தத்தளிக்கும் காதலி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணத்துக்காக பல மாதங்கள் கடந்து கேரளா வந்த இளைஞர் விமான விபத்தில் இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“ஹான்யாவுக்கு ஆறுதல் சொல்லதான் வார்த்தையே இல்ல!”.. திருமண கனவுகளுடன் வந்த இளைஞர் விமான விபத்தில் பலி.. கண்ணீரில் தத்தளிக்கும் காதலி!

துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விமானத்தில் விமானி, விமான ஊழியர்கள், பயணிகள் மற்றும் குழந்தைகள் என மொத்தம் 191 பேர் பயணம் செய்துள்ளனர்.

இந்த விமானத்தில் பயணம் செய்த முகமது ரியாஸ் என்ற 24 வயது இளைஞரும் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த சகோதரர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் ரியாஸ் தன்னுடைய காதலியை இந்த மாதம் திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாகவும் ஆனால் அதற்கு முன்பு விதி அவரை அழைத்துச் சென்று விட்டதாகவும் அவருடைய பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

24 வயதான முகமது ரியாஸ் கேரளாவில் இளங்கலை பட்டம் படித்துக் கொண்டிருந்தபோது தனது கல்லூரி ஜூனியர் ஹான்யா என்கிற பெண்ணை காதலித்து வந்ததாக அவருடைய மாமா தெரிவித்துள்ளார். இவர்களின் காதலை ஒரு வருடத்திற்கு முன்னர் ஏற்றுக்கொண்ட பெற்றோர் இவர்களுக்கு திருமணம் செய்வதற்கு அப்போதே முடிவு செய்தனர்.  எனினும் துபாயில் இருந்த முகமது ரியாஸின் விடுமுறையை பொருத்து முடிவு செய்ய காத்திருந்தனர்.

அப்போதிலிருந்தே ரியாஸ், ஹான்யா குடும்பத்தினர் நெருக்கமாகப் பழகத் தொடங்கி விட்டனர். அதன்படி திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடக்கவிருந்தது. இந்த நிலையில்தான் கொரோனா தொற்றுநோய்களின் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. எனினும் கடந்த மாதம் ஜூலை 14-ஆம் தேதி ரியாசின் வருகை முடிவானதால், இந்த மாதம் திருமணத்தை நடத்துவதற்கு பெற்றோர்கள் முடிவு செய்தனர். ரியாஸ் வீட்டிற்கு வந்தவுடன் அவர் தனிமைப்படுத்தப்படும் காலம் முடிந்தவுடன் திருமணம் நடத்தலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.

இதனையடுத்து துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்தியா வருவதற்கான தனது பயணத்திற்காக விண்ணப்பித்திருந்த ரியாஸ் ஒரு வருடத்திற்கு முன்பு திட்டமிடப்பட்டிருந்த தனது திருமணத்துக்கு செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் துபாயிலிருந்து ரியாஸ் மற்றும் அவருடைய மூத்த சகோதரர் இருவரும் வந்துள்ளனர். ஆனால் விபத்தில் ரியாஸ் உயிரிழந்துவிடவே, அவருடைய சகோதரர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பேசிய ஹான்யாவின் குடும்பத்தினர்  “ரியாஸின் மரணத்தால், ஹான்யா மிகவும் உடைந்து போயுள்ளார். அவரை ஆறுதல் படுத்ததான் எங்களுக்கு வார்த்தைகளே இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்