‘கடற்கரையில் மிதந்த சூட்கேசில்'... 'உடல் பாகங்கள்’... 'ஸ்வெட்டரில் இருந்த க்ளூ’... ‘சிக்கிய மகள், ஆண் நண்பர்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பையில், சூட்கேசில் துண்டு துண்டாக ஆணின் உடல்பாகங்கள் கிடந்த சம்பவத்தில், வளர்ப்பு மகள் மற்றும் அவரது ஆண் நண்பரான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘கடற்கரையில் மிதந்த சூட்கேசில்'... 'உடல் பாகங்கள்’... 'ஸ்வெட்டரில் இருந்த க்ளூ’... ‘சிக்கிய மகள், ஆண் நண்பர்’!

மும்பை மாகிம் கடற்கரையில், கடந்த 4-ம் தேதி, சிலர் வாக்கிங் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பெரிய சூட்கேஸ் ஒன்று மூடப்பட்டு, கால் மட்டும் வெளியில் நீட்டிக்கொண்டிருந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், சூட்கேஸைக் கைப்பற்றி அதைத் திறந்துப் பார்த்தபோது, ஆண் சடலம் ஒன்று, துண்டு துண்டாக வெட்டிய நிலையில் ஒரு கையோடு இணைந்த தோள்பட்டை பகுதி, ஒரு கால், மர்ம உறுப்புகள் ஆகியவை பிளாஸ்டிக் பைக்குள் வைக்கப்பட்டு இருந்தது.

தலை உள்ளிட்ட மீதி பாகங்கள் இல்லாமல் இருந்ததால், போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்தனர். அதன் பின்னர், கிடைத்த உடல் பாகங்களை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் சடலத்தின் மீது இருந்த, 2 சர்ட்கள், ஒரு பேண்ட் மற்றும் ஸ்வெட்டரை வைத்து, தற்போது அவரையும், கொலையாளிகளையும் கண்டுப் பிடித்துள்ளனர். சூட்கேஸில் இருந்த டிரெஸ்ஸில், ஆல்மோஸ் மென்ஸ் வியர் என்ற டெய்லர் கடையின் பெயர் இருந்தது. அதை வைத்து அங்கே விசாரித்தபோது, இறந்தவரின் பெயர் மற்றும் அட்ரஸ் கிடைத்ததால், அதை வைத்து ஃபேஸ்புக்கில் தேடினர்.

அப்போது, கொலை செய்யப்பட்ட நபர், அதே ஸ்வெட்டருடன் இருந்ததை கண்டு அடையாளம் கண்டுள்ளனர் போலீசார். அவரது பெயர் பெனட் ரிப்பலோ (59) என்பது தெரிய வந்தது. அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது, வீடு பூட்டியிருந்துள்ளது. அக்கம்பக்கத்தில் போலீசார் விசாரித்ததில், பெனட் மற்றும் அவரது வளர்ப்பு மகளான ஆரத்யா (19) ஆகிய இருவர் மட்டுமே இருந்ததாக கூறியுள்ளனர். அதன் பின்னர் நடத்திய விசாரணையில், ஆரத்யா தான், தந்தையை கொன்றது தெரிய வந்தது. ஆரத்யாவுக்கும், அதேப் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டதால், இதனை தந்தை பெனட் கண்டித்துள்ளார்.

மேலும், வளர்ப்பு மகளான ஆரத்யாவுக்கு பாலியல் தொல்லையும் பெனட் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆரத்யா, கடந்த 26-ம் தேதி, பெனட்டை கம்பால் தாக்கி, ஆண் நண்பரான  சிறுவனின் உதவியுடன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர், அந்த வீட்டில் 3 நாள்களாக, சடலத்துடன் இருவரும் இருந்துள்ளனர். அப்போது துண்டு துண்டாக உடலை வெட்டி, 3  சூட்கேஸ்களில் அடைத்து, ஆட்டோவில் சென்று மாகிம் கடற்கரையில் பல்வேறு இடங்களில் வீசியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தற்போது, இவருவரையும் கைதுசெய்த போலீசார், மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FATHER, DAUGHTER, MURDER, SUITCASE