'புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்...' 'லூடோ விளையாட என்ன சேர்த்துக்கல...' அக்காவையும் சேர்த்து போலீசில் புகார் கொடுத்த சிறுவன்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் 8 வயது சிறுவன் தன் அக்கா உட்பட 5 பெண்கள் மீது லூடோ விளையாட சேர்த்துக் கொள்ளாததால் கைது செய்யுமாறு போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்...' 'லூடோ விளையாட என்ன சேர்த்துக்கல...' அக்காவையும் சேர்த்து போலீசில் புகார் கொடுத்த சிறுவன்...!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுவன் உமர் நிதர். 3 ஆம் வகுப்பு படிக்கும் இந்த சிறுவன் பள்ளி விடுமுறையில் இருந்தாலும், ஊரடங்கு காரணத்தால் தன் நண்பர்களுடன் விளையாட போக முடியாமல் இருந்துள்ளது. அவரின் அக்கா மற்றும் அக்காவின் தோழிகளிடத்தில் என்னையும் உங்களோடு விளையாட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த கூட்டத்தில் இவர் மட்டும் ஆண் என்பதால் அந்த சிறுமிகள் கிண்டல் அடித்தும், விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாமலும் இருந்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த உமர் தன் தந்தையிடம் இதனை பற்றி கூறியுள்ளார். உமரின் தந்தையும் விளையாட்டாக 'நீ அவங்க மேல போலீசில் புகார் கொடு' என்று கூறியுள்ளார்.

எதிர்பாராத விதமாக உமரின் பக்கத்து வீட்டிற்கு வழக்கு விசாரணைக்காக கஸ்பா காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு போலீசார் வந்துள்ளனர். அவர்களை பார்த்த உமர் 'எனக்கு ஒரு கம்பளைண்ட் கொடுக்கணும். நான் ஒரு பையன் என்பதால் என் அக்கா மற்றும் அவளின் தோழிகள் லூடோ, பேட் மிண்டன் மற்றும் போலீஸ் திருடன் விளையாட்டில் என்னை சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்' என கூறியுள்ளார். இப்போது இரவு நேரம் ஆகிவிட்டதால் நாளை நாங்கள் நேரில் வந்து பார்க்கிறோம் என சொல்லி போலீசார் அங்கிருந்து புறப்பட்டுள்ளது. இரவோடு இரவாக உமர் ஒரு புகார் கடிதத்தை ரெடி பணியுள்ளார்.

மறுநாள் காலை அப்பாவி சிறுவனின் வழக்கை விசாரிக்க யு.பி உமேஷ் மற்றும் கே.டி நிராஸ் காவலர்கள் உமரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். உமர் தான் எழுதிய கடிதத்தில், 'நான் அவர்களிடம் (சிறுமிகளிடம்) தங்கள் விளையாட்டுகளில் என்னை அழைத்துச் செல்லும்படி பல முறை சொன்னேன், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டார்கள். உடனடியாக அவர்களை கைது செய்யவேண்டும்' என எழுதி இருந்தது.

போலீசார் உடனடியாக உமரின் அக்காவையும், அவரின் தோழிகளையும் அழைத்து உமரை விளையாட்டில் சேர்த்துக் கொள்ளுமாறும், அவனும் உங்களை போல் தான் என அறிவுறுத்தி உள்ளனர். இந்த சிறுவன் செய்த செயல் கேரள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் தற்போது இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.