'இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்'... 'தமிழ் வழியில் படிப்பு'... 'வாரி வழங்குவதில் வள்ளல்'... ஏலேய் 3வது இடத்தில் நம்ம தூத்துக்குடிகாரர்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது

'இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்'... 'தமிழ் வழியில் படிப்பு'... 'வாரி வழங்குவதில் வள்ளல்'... ஏலேய் 3வது இடத்தில் நம்ம தூத்துக்குடிகாரர்!

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் தொழில்துறை கடுமையான சரிவை சந்தித்தது. இருப்பினும் பல பெரிய முன்னணி நிறுவனங்களுக்கும், வர்த்தகர்களுக்கும் இது நல்ல ஆண்டாகவே இருந்துள்ளது. இதனிடையே வருடந்தோறும் ஃபோர்ப்ஸ் உலகளவில் பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

உலகளவில் கோடீஸ்வரர் பட்டியலில் அமேசான் சிஇஓ ஜெப் பெசாஸ் முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 177 பில்லியன் அமெரிக்க டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை பெரும் கோடீஸ்வரராக ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 84.5 பில்லியன் டாலராகும். இவருக்குப் பல தொழில் நிறுவனங்கள் இருக்கும் நிலையில் அதன் மூலம் அவர் வருமானம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இடத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி உள்ளார். இவரின் சொத்துமதிப்பு 50.5 பில்லியன் டாலராகும். இவரின் வருவாய் உள்கட்டமைப்பு துறையின் மூலம் கிடைக்கிறது. மூன்றாவது இடத்தை தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார் பிடித்துள்ளார். இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சி எல் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார். இவரின் சொத்து மதிப்பு 23.5 பில்லியன் டாலராகும்.

இதற்கிடையே ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிடும் உலக பணக்காரர்கள் வரிசையில் தவறாமல் ஷிவ் நாடார் பெயர் இடம் பெற்றிருக்கும். ஷிவ் நாடார் பெரும் பணக்காரர் என்பதைத் தாண்டி, அந்த பணத்தால் அவர் செய்யும் சேவைகள் மூலமாகவே அவர் பெரும்பாலும் அறியப்படுகிறார். ஷிவ் நாடார் தூத்துக்குடி மாவட்டம் மூலைமொழி கிராமத்தில் பிறந்து தமிழ்வழி கல்வி பெற்று மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், கோவை PSG கல்லூரியிலும் பட்டப்படிப்பை முடித்தார்.

கல்லூரி படிப்பை முடித்த அவர், டி.சி.எம். (DCM) நிறுவனத்தில் சுமார் எட்டு ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார். போதுமான அனுபவங்களைப் பெற்ற பிறகு சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக 'மைக்ரோகாம்ப்' என்ற பெயரில் டெலிடிஜிட்டல் கால்குலேட்டர்கள் விற்கும் சிறு நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் 1976ஆம் ஆண்டு எச்.சி.எல். (HCL) கணினி நிறுவனத்தை நிறுவினார்.

முதலில் எலக்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டார். வெளிநாடுகளிலிருந்து கணினி உதிரிப் பாகங்கள் இறக்குமதி, சிங்கப்பூரில் கணினி வன்பொருள் விற்பகம், புதிய வடிவமைப்பிலான மடிக்கணினிகள் எனக் கணினி விற்பனையில் பல பரிமாணங்களிலும் இயங்கினார். சிறந்த தொலைநோக்கு பார்வை இருப்பவர் தான், ஒரு அற்புதமான தொழில்முனைவோராக இருக்க முடிவும் என்பதை நிரூபித்த ஷிவ் நாடார், இனிமேல் கணினி தான் அனைத்தையும் ஆழப் போகிறது என்பதை யூகித்து கணினித் துறையில் தனது கவனத்தைச் செலுத்தினார்.

ஷிவ் நாடார் அன்று அப்படிச் சிந்தித்ததால் தான் இன்று ஹெச்.சி.எல் நிறுவனம் இந்தியாவின் பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. பணத்தைச் சேர்ப்பதோடு மட்டுமல்லாது அதை இல்லாதவர்களுக்கும் கொடுப்பதில் பெரிய மனத்துக்காரர் தான் ஷிவ் நாடார்.

2016க்குப் பின் மட்டுமே 650 கோடிக்கும் மேலாக ஏழை மாணவர்களின் கல்விக்காகச் செலவழித்துள்ள அவர், கல்விதான் ஒரு மனிதனுக்கு உண்மையான வளர்ச்சியாக இருக்கும் என்று கூறி தமிழகத்தில் SSN பொறியியல் கல்லூரியையும் உத்திர பிரதேசத்தில் வித்யாஞான் பள்ளியையும் தொடங்கி நடத்தி வருகிறார். உத்திர பிரதேசத்தில் உள்ள வித்யாஞான் பள்ளியில் படிக்க எந்த கட்டணமும் கிடையாது. அந்த பள்ளி நடத்தும் தேர்வில் மட்டும் வெற்றி பெற்றால், படிப்பு மற்றும் அனைத்து செலவுகளும் பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும்.

மாற்றம் வரும்போது அதனை ஏற்றுக் கொண்டு அதற்கு ஏற்றார் போலத் தன்னையும், தனது நிறுவனத்தையும் வடிவமைத்துக் கொண்டு, பணத்தைச் சேமிக்க மட்டும் செய்யாமல், அதனைக் கொண்டு தன்னை சுற்றி இருப்பவர்களையும், இந்த சமூகத்தையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்  செல்கிறார் இந்த சாதனை தமிழர்.

மற்ற செய்திகள்