விட்டு விலகி ஒதுங்கிச் செல்வதுதான் சமூகப் பொறுப்பா?பிரபல இயக்குநரின் ஆதங்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று வரை உலகின் பல பகுதிகளில் பரவி தனது கொடூரத் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், உலக மக்களை அச்சத்தின் பிடியில் வைத்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் முதல் இந்திய மக்கள் அனைவரும் பிரதமர் மோடி அறிவித்த 21 நாட்கள், 144 தடை சட்டத்தை பின்பற்றி வீட்டினுள் பத்திரமாக இருக்கின்றனர். தமிழகத்தை பொருத்தவரையில் இந்நோயை தடுக்க போதிய மருத்துவ முன் எச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தடை உத்தரவால் பல வேலைகள் முடக்கப்பட்ட நிலையில், திரை உலகமும் ஸ்தம்பித்துள்ளது. பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் இந்த இடைவெளியை அடுத்த கட்ட தயாரிப்புக்காக பயன்படுத்திவருகின்றனர். சிலர் சோஷியல் மீடியா மூலம் தங்கள் ரசிகர்களிடம் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது', 'கோலி சோடா', 'பத்து எண்ணறதுக்குள்ள', 'கடுகு', 'கோலி சோடா 2' உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் டிவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, ‘சமூகப் பாதுகாப்புக்காக நாம் தனித்திருப்பதை அதீதமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நம் எண்ணங்களில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. தீண்டாமை குடும்பப் பாதுகாப்பு என்ற போர்வையில் நம்முள் இறங்கிவிட்டது.

மனிதர்களை மந்தைகள் போல் கூட்டமாக்கிப் பூச்சி மருந்து தெளிப்பதையும், சொந்த ஊர்களுக்குத் திரும்ப விடாமல் கொட்டடியில் அடைப்பதையும் சரிதான் என்று நினைக்க ஆரம்பித்து விட்டோம். ஏற்கனவே கயிறு கட்டியவன், கட்டாதவன் என வட்டம் போட்டுக் கொண்ட நாம் மேலும் சுருங்கி சுயநலமே பொதுநலம் என்றாகிக் கொண்டிருக்கிறோம்.

சக மனிதர்களை ஏன் நண்பர்களைக் கூட அவநம்பிகையோடு தூரத்தில் வைக்க நேரிட்டுவிட்டது. நம் பிள்ளைகளின் மனதில் எத்தனைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என அச்சமாக இருக்கிறது. இந்த ஆரவாரமெல்லாம் அடங்கியப் பிறகு என்றேனும் எங்கேனும் சாலை ஓரம் நாம் மயங்கிக் கிடந்தால் அப்படியே விட்டு விலகி ஒதுங்கிச் செல்வதுதான் சமூகப் பொறுப்பு (social responsibility) என அவர்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கிறோம். சமூக இடைவெளி என்பது மனதுக்குள் மனிதருக்குள் நிரந்தரமாகிவிடுமோ என்று அச்சம் வருகிறது’’ என்று தன் மனத்தில் உள்ளவற்றை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார் விஜய் மில்டன்.

இது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு இணையவாசிகளால் பேசப்பட்டு வருகிறது.https://twitter.com/vijaymilton/status/1244874238445539329?s=20

விஜய் மில்டன் பதிவு|Vijay Milton about social distancing

People looking for online information on Coronavirus, Covid 19, Goli Soda 2, Social distancing, Social Responsibility, Vijay Milton will find this news story useful.