தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். ‘அசுரன்’, 'பாவக்கதைகள்' (ஆந்தாலஜி) படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தை இயக்கி வருகிறார்.

Also Read | Ponniyin Selvan: "வார்த்தையே இல்லங்க".. 'வந்தியத்தேவன்' கார்த்தி நெகிழ்ச்சி!!
லாக்கப் நாவலை விசாரணை எனும் திரைப்படமாகவும், வெக்கை நாவலை அசுரன் எனும் திரைப்படமாகவும் இயக்கிய இவர், எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து சூர்யா நடிப்பிலான வாடிவாசல் திரைப்படத்தை இயக்குகிறார். முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் "வாடிவாசல்" படத்தின் உருவாக்க முன்னோட்டம் சில நாட்களுக்கு முன் வெளியாகி, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
வாடிவாசல் படத்தின் வெள்ளோட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முதலைக்குளம் அருகே உள்ள கீழப்பட்டி கிராம மாசி சிவன் ராத்திரி களரி திருவிழா செட் அமைத்து ஜல்லிக்கட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன. இதேபோல் விடுதலை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருவாயில் உள்ளன.
இந்நிலையில்தான், இயக்குனர் வெற்றிமாறன் சென்னையில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் 60வது பிறந்தநாள் மணிவிழா நிகழ்வில் கலந்து கொண்டார். சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழா, இந்த மணிவிழாவின் ஒரு பகுதியாக இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசிய பேச்சு தற்போது சமூகத்துக்குள் விவாதம் மற்றும் கலந்துரையாடலை ஏற்படுத்தி உள்ளது.
இவ்விழாவில் பேசிய வெற்றிமாறன், “சினிமாவை அரசியல் மயமாக்குவது மிகவும் முக்கியம். மக்களுக்காக தான் கலை. மக்களை பிரதிபலிப்பது தான் கலை. இந்த கலையை இன்று நாம் சரியாக நாம் கையாள வேண்டும். ஒருவேளை இன்று நாம் கலையை சரியாக கையாள தவறினால் நிறைய அடையாளங்களை இழந்து விடுவோம். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. வள்ளுவருக்கு வந்து காவி உடை கொடுக்குறதா இருக்கட்டும். ராஜராஜ சோழன் ஒரு இந்து அரசனாக்குவதா இருக்கட்டும் இப்படி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கு. இது சினிமாவிலும் நடக்கும். இந்த அடையாளங்களை நாம்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம்தான் போராடணும். நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும். இது போல எல்லாரும் ஒன்று சேர்ந்து செயல்படணும்". என அந்த நிகழ்வில் பேசியிருந்தார். இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது.
Also Read | குட் நியூஸ் சொன்ன சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் செந்தில் - ஸ்ரீஜா..! வாழ்த்தும் ரசிகர்கள்