பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் நீதிபதி உத்தரவுப்படி சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களின் குழந்தைகள் பாரதியின் வீட்டில் இருக்கின்றனர். பாரதியை பொருத்தவரை தன்னிடம் வளரும் குழந்தை ஹேமா, தன் குழந்தை என்பது தெரியாது. கண்ணம்மாவிடம் வளரும் லஷ்மியை தன் குழந்தை என ஏற்க மறுக்கிறார். இதுவே பாரதி மற்றும் கண்ணம்மா இருவரின் நீண்ட நாள் பிரச்சனை.
இதனிடையே சட்டவிரோத கருக்கலைப்பால் கைதாகி கொஞ்ச நாட்களாக சிறை சென்ற வெண்பா, ஜாமினில் வெளிவந்து அடிக்கடி பாரதியை சென்று சந்தித்து வருகிறார். அதை பாரதி விரும்பாதபோதிலும், மீண்டும் மீண்டும் வெண்பா தன் ‘வேதாள’ முயற்சியை தொடர்ந்தபடியே இருக்கிறார்.
அவ்வகையில் மீண்டும் டாக்டர்.பாரதியை, அவரது மருத்துவமனை சென்று பார்க்க போன வெண்பா, பாரதியுடனான உறவை சரி செய்து மீண்டும் அவருடன் இணக்கமாக முயற்சிக்கிறார். ஆனால் வெண்பாவை பார்த்தாலே கடுப்பாகும் பாரதி, “என் கண்ணு முன்னால நிக்காத.. போ!” என்று விரட்டினார்.
ஆனால் வெண்பாவோ, “ஏன் பாரதி நீ இன்னும் மாறாமல் அப்படியே இருக்கிறாய்? உன் ஃப்ரண்டு வெண்பா ஒரு கேஸில் கைதாகி சிறை செல்கிறாள் என்றால், அவள் தவறு செய்துவிட்டதாக நீ புரிந்துகொண்டிருக்கிறாய் என்றால், அவள் பக்கத்திலும் ஒரு நியாயம் இருக்கும் என்று நீ ஏன் யோசிக்க மாட்டேன் என்கிறாய்?” என்று பாரதியிடம் கெஞ்சுகிறார்.
ஆனால் எந்த விளக்கத்தையும் கேட்க தயாராக இல்லாத பாரதி, பிடிவாதமாக நிற்க, உடனே வெண்பா, “என்ன பாரதி? கண்ணம்மாவை அழைத்துச் சென்று ஷாப்பிங் செல்கிறாய். அவளுடன் சேர்ந்து வாழத் தொடங்கிவிட்டாய்? என்ன அடுத்த ட்வின்ஸ் குழந்தைகளுக்கு ரெடியாகிட்டியா?” என வெறுப்பேற்றினார்.
இதை கேட்டு, கடுப்பான பாரதி, இதுவரை இல்லாத அளவுக்கு, வெண்பாவை ஓங்கி ஒரு அறைவிட்டார். அந்த அறையை பளார் என விட்ட பாரதி, இனி என் ஹாஸ்பிடல் பக்கமே உன்னை பார்க்க கூடாது என சொல்லிவிட்டு கோபமாக சென்றுவிட்டார். அவர் போன பின்பு, பாரதி தன் மீது உரிமை எடுத்துக்கொண்டு அடிப்பதையே தான் விரும்பியதாகவும், அப்போதுதான் குற்றவுணர்ச்சியில் பாரதி மனமிறங்கி தன்னுடம் பழையபடி பேசுவார் என்றும் வெண்பா தனிமையில் பேசி இனிமை காணுகிறார்.