ஆம்.., இந்த காரணங்கள்தான் சூர்யாவை உயரே உயரே பறக்க வைத்து கொண்டிருக்கிறது! அது ஏன் தெரியுமா??!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா. 23 மூன்று வருடங்களாக தமிழ் சினிமாவில் நிலைத்து நின்று கொண்டிருக்கும் ஒரு பெயர். எத்தனையோ படங்கள், எத்தனையோ கதாபாத்திரங்கள் என ஒவ்வொரு முறையும் திரையில் தன்னை நிரூபித்து கொண்டே இருக்கும் பெரும் பசி கொண்ட கலைஞன்.

சூர்யாவின் படங்கள் சூப்பர் ஹிட்டும் அடித்துள்ளன, சுமார் ஹிட்டும் கொடுத்துள்ளன. இப்படி எத்தனையோ ஏற்ற இறக்கங்களை கண்டிருப்பினும், சூர்யாவின் ஒவ்வொரு முயற்சியையும் ரசிகர்கள் பாராட்ட தவறியதில்லை. இதோ இப்போது சூர்யாவின் சூரரைப் போற்றுவுக்கு கிடைத்து வரும் வரவேற்புகள் அதைதான் காட்டுகின்றன.

ஒரு கதாபாத்திரத்தின் குறிப்பிட்ட கால வாழ்க்கையை திரையில் கொண்டு வரும் பொழுது, ஒரு நடிகன் அதீதமாகவே சிரமப்பட நேர்கிறது. உடல் வடிவில் தொடங்கி உடல் மொழியிலும் பேச்சு வழக்கிலும் கூட அந்த மாற்றத்தை சிதறாமல் நேர்த்தியாக கொண்டு வர வேண்டிய கட்டாயம் உண்டாகிறது. ஆனால், இதை சர்வ சாதரணமாக கையாள்வது சூர்யாவின் சிறப்பு. அதை வாரணம் ஆயிரம் படத்திலேயே கையாண்டு வெற்றி கண்ட சூர்யா, 12 வருடங்கள் கழித்தும் அதே உழைப்பை கொடுத்து ‘மாறா’ கதாபாத்திரத்திற்கு உயிர் ஊட்டியிருப்பது வியப்பைதான் தருகிறது.

ஒரு சினிமா நடிகன் என்பதை தாண்டி, சூர்யா எப்போதுமே இச்சமூகத்தில் மனிதம் போற்றும் கலைஞனாகவே இருந்து வந்துள்ளார். கல்வி, சமூக முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளில் தன் பங்களிப்பை கொடுத்து வருவதோடு, மக்களுக்கு ஒரு பிரச்சனை என வருகிறபோது, தனது வெளிப்படையான பார்வையை எவ்வித அச்சமுமின்றி முன்வைத்து வருகிறார், இவர். சூரரைப் போற்று படத்திலும் கூட அதே நெறியுடன் நேர்கொண்ட நடை போடுகிறார். படம் நெடுக பல காட்சிகளில் வீரியமான வசனங்களை உரக்கவே பேசியிருக்கிறார். அதுவே கைதட்டல்களாக மாறி இருக்கிறது.

எந்த ஒரு சாமானியனும் இப்படைப்பை பார்க்கையில், சாதிக்க துடிக்கும் உத்வேகத்தை பெறுவான் என்றால், அதுவே இப்படத்தின் உண்மையான வெற்றி என்றுணர்ந்து, இயக்குநர் சுதா கொங்கராவிடம் தன்னை முழுமையாக கொடுத்து, நெடுமாறன் ராஜாங்கத்தின் உணர்வு குவியல்களை கொட்டி தீர்த்திருக்கிறார். அதற்கு சூர்யா மேற்கொண்ட உழைப்பும் காட்டிய சிரத்தையும் அலாதியானது. இதைதானே இத்தனை நாள் எதிர்ப்பார்த்தோம் என ரசிகர்கள் மனம் நிறைந்து பாராட்டி பேசுவதை சமூக வலைதளங்கள் எங்கும் காண முடிகிறது.

இதுதான், இந்த கொண்டாட்டமும் பாராட்டும்தான் ஒரு கலைஞனை இன்னும் அடுத்தடுத்த படிகளுக்கு கொண்டு செல்லகின்றன. அதற்கு எப்போதுமே முழு தகுதி கொண்டவர் சூர்யா. இச்சமூகத்தின் மீது பெரும் அக்கறையை சுமந்து நடக்கும் இந்த கலைஞனை ரசிகர்கள் எப்போதுமே கொண்டாடுவார்கள். அதற்கு இத்திரைப்படம் ஓர் உதாரணம். வானில் உயர்ந்து பறப்பது மாறாவின் விமானம் மட்டுமல்ல, சூர்யாவும்தான்!!!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சூர்யா சிறப்பு கட்டுரை | this is why suriya is celeberated by fans everytime ft soorarai pottru

People looking for online information on Soorarai Pottru Tamil, Suriya will find this news story useful.