“படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல்..”.. அன்புமணி ராமதாஸ்க்கு சூர்யா பதில் கடிதம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பழங்குடி இருளர் இன மக்களின் மீதான காவல்துறையினரின் மனித உரிமை அத்துமீறலை பேசும் கமர்ஷியல் த்ரில்லர் படமாக அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடியில் நேரடியாக நவம்பர் 2-ஆம் தேதி வெளியான படம் ஜெய் பீம்.

Advertising
>
Advertising

நடிகர் சூர்யா, தயாரித்து நடித்த இப்படத்தில், சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக கோர்ட்டில் வாதிடுவார். த.செ.ஞானவேல் இயக்கிய இந்த படத்தில், லாக்கப் மரணத்துக்கு உள்ளாகும் ராஜாக்கண்ணுவின் கேரக்டரில் மணிகண்டனும், அவருடைய மனைவி செங்கேனியாக லிஜோமோல் ஜோஸூம் நடித்துள்ளனர்.

எனினும் செங்கேனி கதாபாத்திரத்தின் நிஜ வாழ்க்கை பெண்மணியின் பெயர் பார்வதி. இதேபோல், இப்படத்தில் கொடூர காவலராக வரும் குருமூர்த்தி கதாபாத்திரம், உண்மை நிகழ்வில் அந்தோணி சாமி என்பவரின் கேரக்டரை பிரதிபலிப்பதாய் அமையும்.  இப்படி, படத்தில், பல கேரக்டர்களுக்கு உண்மையான பெயர்களும், சில கேரக்டர்களுக்கு கற்பனை பெயர்களும் சூட்டப்பட்டிருந்தன. முன்னதாக, படத்தில் காவல் சார்பு ஆய்வாளர் குருமூர்த்தி போன் பேசும் காட்சியின் பின்னணியில் இருந்த குறிப்பிட்ட சமுதாய மக்களின் குறியீடு சர்ச்சைக்குள்ளானதை அடுத்து, அந்த படம் வேறு ஒரு கடவுளின் படமாக மாற்றப்பட்டு தற்போது படம் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனிடையே இப்படத்தில காவலர் அந்தோணி சாமியின் பெயர் மாற்றப்பட்டு அவர் வன்னியராக சித்தரிக்கப்பட்டதையும், நிஜ செங்கேனியான பார்வதி அம்மாள், ஊர் மக்களும், ஊராட்சி மன்ற தலைவரும் தமக்கு உறுதுணையாக இருந்தது பற்றி கூறியும், அவர்களை ஜாதி வெறியர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டு தமது அறிக்கையில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அந்த அறிக்கையில், “படம் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது தானா? அப்படியானால், ஏன் சில இடங்களில் உண்மை நிகழ்வில் இருந்தவர்களின் பெயர்கள் அப்படியேவும், சில இடங்களில் மாற்றப்பட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன? இது வன்னியர்களை இழிவுபடுத்தி குறிப்பிட்ட சாதியினரின் சாதி உணர்வுக்கு தீனி போடுவதா? அல்லது சர்ச்சையை உருவாக்கி விளம்பரம் தேடும் முயற்சியா?” என பேசியிருக்கும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் “படைப்புச் சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப் படக்கூடாது:  மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா, தமது ட்விட்டரில் தம்முடைய அறிக்கையை பகிர்ந்துள்ளார். அதில், “மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம்.

தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி.  நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், ‘அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது’ என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச  முயற்சித்திருக்கிறோம். கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி  சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறீவிர்கள் என நினைக்கிறேன்.

‘படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை’என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாய் நான் ஏற்கிறேன். அதேபோல,  ‘படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும்’என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. ‘இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்கிற அறிவிப்பைப் படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்திருக்கிறோம்.

எளிய மக்களின் நலன்மீது அக்கறையில்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும், அவர்கள் ஒரே மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள். அதில் சாதி, மத, மொழி, இன பேதம் இல்லை. உலகம் முழுவதும் இதற்கு சான்றுகள் உண்டு. படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை,  குறிப்பிட்ட ‘பெயர் அரசியலுக்குள்’ சுருக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார். எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடப்படுவதாக  கருதப்படுமேயானால், அதற்கு முடிவே இல்லை. அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், ‘பெயர் அரசியலால்’ மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது.

சக மனிதர்கள் வாழ்வு மேம்பட, என்னால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம். தங்கள் புரிதலுக்கு நன்றி. அன்புடன், சூர்யா” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Suriya replies to anbumani ramadoss over jaibhim controversy

People looking for online information on Anbumani, Anbumaniramadoss, Suriya will find this news story useful.