“துரோகிகளை பாத்துட்டோம்.. களை எடுக்க வேண்டிய லிஸ்ட்ல இவர் தான் ஃபர்ஸ்ட்!” - கமல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்கள் நீதி மய்யம் கட்சி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர் ராஜினாமா செய்துள்ளனர்.

குறிப்பாக இந்த கட்சியில் இருந்து துணைத்தலைவர் மகேந்திரன், சந்தோஷ் பாபு, சி.கே.குமரவேல், மவுரியா, முருகானந்தம், நிர்வாக குழு உறுப்பினர் உமாதேவி ராஜினாமா செய்துள்ளனர். முன்னதாக, கமீலா நாசர் ராஜினாமா செயதிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உயிரே உறவே தமிழே.. பத்திரமாக இருக்கிறீர்களா? சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெரும் கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்ற தேர்தலை சந்தித்தோம். ஒரு பெரிய போரில் திறம்பட செயல்பட்டோம்.

களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்து இருந்தார்கள் என்பதை கண்கூடாக கண்டோம். துரோகிகளை களையெடுங்கள் என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படி களையெடுக்க வேண்டியவர்களில்  முதல் நபராக இருந்தவர் டாக்டர்.ஆர்.மகேந்திரன். கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார். ஜனநாயகமும் சமயங்களில் தோற்றுப் போகும் என்பதற்கு மிகப் பெரிய உதாரணம் இவர் தான். முகவரி கொடுத்தவர்களின் முகங்களை எடுத்துக் கொள்ள துணிந்தார்.

கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த பல நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை. நேர்மை இல்லாதவர்களும் திறமை இல்லாதவர்களும் வெளியேறும்படி மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். தன்னுடைய திறமையையும் நேர்மையையும் தோல்வியையும் அடுத்தவர் மீது பழி போட்டு ‘அனுதாபம்’ தேட முயற்சிக்கிறார்.

தன்னையும் எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக விலகிக் கொண்டார். ஒரு களையே தன்னை களை என்று புரிந்து கொண்டு தன்னைத் தானே நீக்கிக்கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான்.

என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்படையானவை. நான் செய்த தவறுகளை மறைக்கவோ மறுக்கவோ ஒருபோதும் முயற்சித்ததில்லை. என் சகோதர சகோதரிகளான மக்கள் நீதி மய்யத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு மனம் தளர வேண்டாம் என ஆறுதல் சொல்ல வேண்டியதில்லை. உங்களின் வீரமும் தியாகமும் ஊர் அறிந்தவை.

தோல்வியின் போது கூடாரத்தை பிய்த்துக் கொண்டு ஓடும் கோழைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கொண்ட கொள்கையில் தேர்ந்த பாதையில் சிறிதும் மாற்றம் இல்லை.

மண் மொழி மக்கள் காக்க களத்தில் நிற்போம். கமல்ஹாசன்,  தலைவர் - மக்கள் நீதி மய்யம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ALSO READ: கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய நபர்களின் ராஜினாமாவால் பரபரப்பு.. ‘நான் ஏன் ராஜினாமா செய்தேன்?’ - மகேந்திரன் விளக்கம்!

தொடர்புடைய இணைப்புகள்

MNM Leader Kamalhaasan Exlpanation note over mahendran resign

People looking for online information on Kamal Haasan, Makkal Neethi Maiam will find this news story useful.