"பொன்னியின் செல்வன்" படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு எந்த ஊர்ல நடக்குது தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions) மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் (Madras Talkies) நிறுவனங்கள் இணைந்து "பொன்னியின் செல்வன்" படத்தை தயாரிக்கின்றன.

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்"  (Ponniyin Selvan) படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்குகிறார். சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது.

முழு வீச்சில் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத் நகரங்களில் முடிந்த பின், படக்குழு மத்திய பிரதேசம் சென்றது. அங்கு சில நாட்களுக்கு முன் ஆர்ச்சா, குவாலியர்,மகேஸ்வர் நகரில் படப்பிடிப்பு தொடங்கி நிறைவடைந்தது. பின்னர் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தமிழ்நாட்டில் உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி பகுதிகளில் தொடங்கி உள்ளது. மேலும் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பின் நீட்சியாக கர்நாடக மாநிலம் மைசூருவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

இதனை படத்தில் சேந்தன் அமுதன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அஸ்வின் ககுமனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதை பதிவு செய்துள்ளார். அதில் அவர் விமானத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு மைசூரு செல்வதாக தெரிவித்துள்ளார். 

கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிவபக்தியிலும் சிறந்தவராக சேந்தன் அமுதன், கதாநாயகன் வல்லவரையன் வந்தியத்தேவனின் நண்பனாகவும், பூங்குழலி எனும் படகோட்டி பெண்ணை காதல் செய்பவனாகவும் கல்கி படைத்திருப்பார். கண்டராதித்தனாருக்கும், செம்பியன்மாதேவிக்கும் பிறந்த குழந்தைதான் சேந்தன் அமுதன் என்ற உண்மை தெரியவரும் போது, அருள்மொழிவர்மனுக்கு (ராஜராஜ சோழன்) மணிமுடி சூட்டுவதற்கு முடிவுசெய்யப்பட்டு அருள்மொழிவர்மனுக்கு கிரீடம் சூட்டுகிறபோது, கிரீடத்தை வாங்கி எடுத்துக்கொண்டு போய் சேந்தன் அமுதன் தலையில் முடியைச் சூட்டி, ‘சோழ மாமன்னர் இவர்தான்’ என்று ராஜ ராஜ சோழன் அறிவிப்பார். சேந்தன் அமுதனே உத்தம சோழனாக ஆட்சி செய்ததாக பொன்னியின் செல்வனில் கல்கி படைத்திருப்பார்.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவு செய்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Maniratnam ponniyin selvan movie final shooting update

People looking for online information on Mani Ratnam, Ponniyin Selvan will find this news story useful.