நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படங்களில் பிரபலமான இயக்குநர் S. எழில், முதல் முறையாக தன் பாணியிலிருந்து மாறுபட்டு முழுக்க முழுக்க ஒரு மர்மம் நிறைந்த திரில்லர் படத்தை, இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் 'யுத்த சத்தம்' எனும் படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குநர் எழில் இயக்கிய இந்த திரைப்படத்தை , முன்னணி குற்ற நாவலாசிரியர்களில் ஒருவரான ராஜேஷ்குமார் எழுதியுள்ளார். ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் பிச்சைக்காரன் புகழ் மூர்த்தி, மிதுன் மகேஸ்வரன், முத்தையா கண்ணதாசன், சாய் பிரியா தேவா, ரோபோ சங்கர், காமராஜ், மது ஸ்ரீ, மனோபாலா, சாம்ஸ், வையாபுரி, கும்கி அஷ்வின் மற்றும் மற்றும் பல முக்கிய கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
டி இமான் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். கனல் கண்ணன் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார். சுகுமார் கலை இயக்கம் செய்ய, முருகேஷ் பாபு வசனங்கள் எழுதுகிறார். யுகபாரதி பாடல் வரிகள் எழுத, தினேஷ், தினா மற்றும் அசோக் ராஜா நடன இயக்கம் செய்துள்ளனர். Kallal Global Entertainment சார்பாக D.விஜயகுமாரன் மற்றும் எழில் இணைந்து "யுத்த சத்தம்" படத்தை தயாரிக்கின்றனர்.
"யுத்த சத்தம்" படம் குறித்து இயக்குநர் எழில் கூறியதாவது...
"யுத்த சத்தம்" என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படைப்பாகும். முதல் காரணம் இது என் வழக்கமான திரைப்பட பாணியிலிருந்து மாறுபட்டு, மிகவும் நேர்த்திகரமாக உருவாகும் படைப்பு. நான் இதுவரையிலும் மென் உணர்வுகளை கூறும் நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படங்களையே செய்து வந்துள்ளேன். ஆனால் இப்படம் மர்மம் நிறைந்த, பரப்பான திரில்லர் திரைப்படம் ஆகும். இது திரில்லர் வகையில் மட்டும், என் படங்களிலிருந்து மாறுபட்டதல்ல, படத்தின் உருவாக்கத்திலேயே என் படங்களிலிருந்து முற்றிலும் புதிதானதாக இருக்கும். "யுத்த சத்தம்" தலைப்பு படத்தின் கதை உருவான ராஜேஷ்குமார் அவர்களின் நாவலின் அதே தலைப்பாகும். படம் அவரது கதையிலிருந்து வேறுபடாமல் சிறப்பாக வந்திருப்பதாக என்னை பாராட்டவும் செய்தார். நான் உதவி இயக்குநராக, நடிகர் பார்த்திபன் அவர்களுடன் பணிபுரிந்துள்ளேன் இப்போதும் அவர் திரைக்கதையில் மாயாஜாலம் புரிந்து, இயக்குநராக அசத்தி வருகிறார். அவரை திரையில் இயக்குவது மகிழ்ச்சியாக உள்ளது. நடிகர் கௌதம் கார்த்திக் மிகத்திறமை வாய்ந்த இளம் நடிகர், இப்படத்தில் மிக அட்டகாசமான நடிப்பினை தந்துள்ளார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி அசத்தும் திரைப்படமாக இப்படம் இருக்கும் என்றார்.
தமிழின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய்சேதுபதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, ரசிகர்களின் பார்வைக்கு வெளியிட்டுள்ளார்.