கர்ணன் பட காலகட்ட CONTROVERSY!.. சுட்டிக்காட்டிய உதயநிதி!.. 'அசுரன்' படத்தில் நடந்தது என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கர்ணன். கலவையான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களுடன் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தை பலரும் பார்த்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் தொடர்பான பாராட்டுகளை தெரிவித்ததுடன் ஒரு முக்கிய கருத்தினை பதிவிட்டிருந்தார். அதில், “1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கர்ணன் திரைப்படத்தில் 1997-ல் இந்த கதை நிகழ்வதாக குறிப்பிடப்பட்டாலும் இந்த கதையில் வரும் காட்சிகளும் சம்பவங்களும் கற்பனையே என்று முன்பே டைட்டில் கார்டில் போடுகிறார்கள். இதனை தொடர்ந்து கொடியங்குளம் கலவரத்தை நினைவூட்டும் விதமாக பொடியங்குளம் என்கிற ஊரில் நடக்கும் கலவரம் இருக்கிறது.  ஆனால் இந்த படத்தில் நேரடியாக எந்த ஒரு பிரிவினரையும் கட்சியினரையும் தலைவரையும் குறிப்பிடவில்லை என்றாலும் கூட இந்த கதை நிகழும் காலகட்டம் 1997 என டைட்டில் கார்டில் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் நிஜத்தில் 1991-96ல் ஜெயலலிதா ஆட்சிக்காலமும், 1996-2001ல் கருணாநிதி ஆட்சிக்காலமும் நடந்தது. ஆக, 1995-ல் ஜெயலலிதா ஆட்சியின்போது நடந்த கொடியன்குளம் சம்பவம் கர்ணன் படத்தில் 1997-ஆம் ஆண்டு 'பொடியங்குளத்தில்' நிகழ்ந்தது போல் கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 1997-ல் மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று பேருந்தில் திரும்பும்போது படுகொலை செய்யப்பட்டதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன. எனவே இந்த இருவேறு ஆட்சிக் காலங்களிலும் நடந்தவை மட்டுமல்லாது, மொத்தமாக 90களில் தமிழகத்தில் நடந்த ஒடுக்கப்பட்டோர் உரிமைப் போராட்டங்களும் கர்ணன் படத்தில் இயக்குநர் ஆங்காங்கே பிரதிபலித்துள்ளார்.

இதேபோல் இயக்குநர் வெற்றிமாறன் மு.சந்திரகுமாரின் 'லாக்கப்' நாவலை மையமாக வைத்து இயக்கிய விசாரணை படத்தில், படத்தின் முதற்பாதியில் லாக்கப் நாவலையும்,  இரண்டாம் பாதியில் வேளச்சேரி என்கவுன்ட்டர் சம்பவத்தையும் இணைத்து ஒரு புனைவுக்கதையை சிருஷ்டித்திருப்பார். 

அத்துடன் தனுஷ் நடிப்பில் வெளியாகி அண்மையில் தேசிய விருது பெற்ற அசுரன் திரைப்படத்தில் கூட, 60களில் பஞ்சமி நில பிரச்சனை எழுந்ததாக காட்டியிருப்பார். குறிப்பிட்ட அந்த காலக்கட்டத்தில் பஞ்சமி நிலத்தை மீட்டு மக்களிடம் வழங்கும் போராட்டத்தை கம்யூனிஸ்டு இயக்கங்கள் முன்னெடுத்ததாக காட்டியிருப்பார். கீழ்வெண்மணிச் சம்பவம் போன்ற ஒரு குடிசை எரிப்பு சம்பவத்தை பிளாஷ்பேக்கில் கொண்டு வந்திருப்பார். அதுமட்டுமல்லாமல், சில வருடங்களுக்கு முன்பு சிதம்பரம் பகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவம் தான் ‘அசுரன்’ தனுஷ் ஊரார் காலில் விழக்கூடிய அந்த உருக்கமான காட்சி. இப்படி வெவ்வேறு காலகட்ட சம்பவங்களை கதையின் மையக்கருவுக்காக புனைவுக்கான சுதந்திரத்தை எடுத்துக்கொண்டு கதை அமைக்கப்படவதை ‘Chronological Error’ என்று வெற்றிமாறன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததுடன், அசுரன் படத்தில் இந்த Chronological Error-ஐ தெரிந்தே செய்ததாகவும், இந்த பிரச்சனைகளை பேச வேறொரு களம் அமையுமா என்பது தெரியவில்லை என்பதால் அசுரனிலேயே பேசியதாகவும் கூறியிருந்தார்.

இப்படி இருக்க, கர்ணன் படத்திலும் இப்படி நிகழ்ந்துள்ளதை அடுத்து, உதயநிதி இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளார். எனினும் கர்ணன் படத்தரப்பில் இருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களோ, அறிவிப்போ காணப்படவில்லை.

ALSO READ: "கர்ணன் படத்தில் தனுஷ் ஓவியத்த வரஞ்சுது இவர்தானா?"... Art Director Exclusive Interview!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Karnan movie chronological controversy கர்ணன்

People looking for online information on Asuran, Dhanush, Kalaippuli S Thanu, Mari Selvaraj, Santhosh Narayanan, Vetrimaaran will find this news story useful.